கடலூர், மார்ச் 20- நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதனன்று கடலூர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், காவல் துறை கண்காணிப்பாளர் ராஜா ராம், வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கடலூர் பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சமூக நலத்துறை அலுவலர் கோமதி, மகளிர் திட்ட இயக்குநர் சுருதி, தாசில்தார் பலராமன், காவல் ஆய்வாளர் குரு மூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.