நாமக்கல், அக்.10- சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் பஞ்சாயத்து பகுதியில், 12ஆவது வார்டு சுபாஷ் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில், சுபாஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து கழிவுநீர் கலந்து நிற மாறிய நிலையில், குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பரவியது. இதுகுறித்து, களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி கூறியதாவது, களியனூர் பஞ்சாயத்து 12-ஆம் வார்டு சுபாஷ் நகர் பகுதியில் சமீபத்தில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. இதனால், தொட்டியின் அடி பகுதியில் தேங்கி இருந்த வண்டல் மண் அகற்றப்பட்டது. இந்நிலையில், கழிவுகள் குடிநீர் குழாய்களில் தேங்கி இருந்ததால், குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட 10 நிமிடங்கள் குடிநீர் நிறம் மாறி வந்துள்ளது. இந்நிலையில் இந்த சூழலை பயன்படுத்திய நபர் நிறம் மாறி வந்த குடிநீரை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் என்றார்.