districts

சாதியின் பெயரால் வன்முறைக் காடாக்க பாமக முயற்சி!

சென்னை, ஏப். 29-பொன்பரப்பி வன்கொடுமையைக் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர் எஸ்றா சற்குணம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோரை மிரட்டும் தோனியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டியிருக்கிறார்.வன்னியர் சமூகத்தைப் பற்றிப் பேசாதவற்றையெல்லாம் பேசியதாகப் புனைந்துரைத்து சாதிரீதியாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவரது அறிக்கை உள்ளது. அவர் அறிக்கை வெளியிட்ட பிறகு, குறிப்பாக இரா.முத்தரசனுக்கு பாமக தரப்பிலி ருந்து தொலைபேசியில் மிரட்டல்களும் ஆபாச வசைகளும் வந்த வண்ணம் உள்ளதாக அவர் தனது வேதனையை வெளிப்படுத்தி யுள்ளார். ஜனநாயகத்துக்குப் புறம்பான இத்தகைய அநாகரிகப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக திருமாவளவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.நீதிக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்களை மிரட்டுவதன் மூலம் ஜனநாயகச் சக்திகளின் ஒற்றுமையைச் சிதைத்துவிடலாம் என்றும் விடுதலைச் சிறுத் தைகளைத் தனிமைப்படுத்திவிடலாம் என்றும் கணக்குப் போடும் பாமகவின் தந்திரம் பலிக்காது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். சாதியின் பெயரால் வெளிப் படையாக வன்முறையைத் தூண்டும் மருத்துவர் ராமதாசின் வெறுப்பு அரசியலுக்கு தமிழக அரசு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்து வதற்கு மருத்துவர் ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பதைத்தான் அவரது அறிக்கை புலப்படுத்துகிறது. இதை அலட்சியப்படுத்தாமல் தமிழக அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். பேராயர் எஸ்றா சற்குணம், இரா. முத்தரசன் இருவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

;