கோவை, நவ. 27- வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் நடமாடும் வரையாடுகளை தொந்தரவு செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு வனப்பகுதியில் உள்ள வரையாடுகளை பாதுகாக்கும் விதமாக ரூ.8 கோடி தனி நிதி ஒதுக்கி வனத்துறை உயர் அதிகாரிகளை நியமித்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து பத்தாவது கொண்டை ஊசி வரை வரையாடுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் ஆழியார் அணையை கண்டு களிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிமுனை உள்ளது. தற்போது முழுமையாக பழுது அடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உள்ளனர் வனத்துறையினர்,வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் நின்று புகைப்படம் எடுப்பதும் வாகன போக்குவரத்து நெரிசலை உருவாக்குகின்றனர். வால்பாறைக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் வரையாடுகளின் அருகில் சென்று போட்டோ எடுப்பதும், வரையாடுகளை தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால், அச்சமடையும் வரையாடுகள் சாலையின் மையப்பகுதிக்கு வரும்பொழுது, வளைவில் இருந்து வரும் வாகனங்கள் பல நேரங்களில் விபத்தில் சிக்குகிறது. எனவே, வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.