தருமபுரி, ஜன.22- தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12,42,825 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கி.சாந்தி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதன்பின் அவர் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் 6,28,262 ஆண் வாக்காளர்கள், 6,14,404 பெண் வாக்காளர்கள், 159 மாற்றுப் பாலினத்தவர்கள் என மொத்தம் 12,42,825 வாக்காளர்கள் உள்ளனர். பொதுமக்கள் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு ஆன்லைன் (voters.eci.gov.in மற்றும் Voter Helpline app) வழியாகவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை விண்ணப்பம் செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் கீதாராணி, வில்சன் ராஜசேகர், தேர்தல் வட்டாட்சியர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.