பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட காட்டு யானை 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் கடந்த 25ம் தேதி கால் மற்றும் உடல் பகுதிகளில் காயத்துடன் எங்கும் நகர முடியாமல் உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் காட்டு யானை ஒன்று உள்ளதாக அப்பகுதி மலைவாழ் மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் யானையை பார்த்ததில் இரண்டு கால்களிலும் காயங்கள் ஏற்பட்டு யானை நகர முடியாமல் நின்றுக் கொண்டிருந்ததை உறுதி செய்தனர்.
இதன்பின்னர் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் உடனடியாக யானைக்கு முதல் உதவி சிகிச்சை வனத்துறையினரால் அளிக்கப்பட்டது.
பின்னர் கும்கி யானைகள் உதவியோடு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் யானக்கு கால்களில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு கிருமிநாசினி உள்ளிட்ட மருந்துகள் அளிக்கப்பட்டு துணியின் மூலம் யானையின் காயம் பட்ட கால்களுக்கு கட்டு போடப்பட்டது.
பிறகு கும்கி யானைகளின் உதவியோடு வாகனத்தில் ஏற்றப்பட்டு கோழிக்கமுத்தி யானைகள் பயிற்சி முகாமில் பிரத்யேக மரக்கூண்டு அமைத்து அதில் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் வன - கால்நடை மருத்துவ குழு சார்பில் யானைக்கு தீவிர மருத்துவ சிகிச்சைகளும், உணவு மற்றும் பழங்கள் வழங்கி கடந்த 5 நாட்களாக மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் மருத்துவ குழு கண்காணிப்பில் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த யானை உடல் நலம் மேலும் தீவிரமாக பாதிக்கப்பட்டு வியாழனன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
தற்போது, மருத்துவ குழு சார்பில் உயிரிழந்த யானைக்கு உடல்கூறாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்த யானைக்கு மூன்று கால்களிலும் அதிகளவில் காயங்கள் இருப்பதாலும் முகம் மற்றும் உடலிலும் காயங்கள் இருந்ததால் யானை இறப்பிற்கான காரணம் உடற்கூறாய்வு பிறகே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில்,
உயிரிழந்த யானையின் கால்களில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் செப்டிசீமியா எனப்படும் பாக்டீரியா தொற்று பரவியிருக்ககூடும்.மேலும் இதன்மூலமாக நோய்வாய்ப்பட்டு இறந்திருக்ககூடும். என டாப்சிலிப் வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.