districts

சுந்தரனார் பல்கலை. கட்டண முறைகேடு வழக்கு

மதுரை,ஏப்.26-நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டண வசூல் முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டில் கட்டண முறைகேடு நடந்ததாகக் கூறி முன்னாள் பேரா சிரியர் ஆனந்த கிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், சாட்டிலைட் கோர்ஸ் எனும் பெயரில் மாணவர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலித்தும், முறையான பயிற்சி அளிக்கப்படாமல் ஏமாற்றியதாக கூறப்பட்டிருந்தது.இது தொடர்பான புகாரை மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு ஆவணங்களை பார்க்கும்போது விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தெரியவருவதாகவும் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

;