tamilnadu

img

உலைவு

உச்சிவெயிலுக்கு வெளிர் நீல வானம் பச்சைக்கொடி காட்டி விட்டது. தார் ரோடு தீக்குச்சியை உரசினால் கொளுந்துவிட்டு எரிய காத்திருந்தது. ரோடு ஓரங்களில் வெட்டித் தள்ளிய மரங்கள் போக, லட்சுமி ஸ்டோர் அருகே துளிர்த்திருந்த வேப்ப மரத்தின் இலைகள் அசைய மறுத்து வெயிலிடம் உயிருக்கு ஓரியாட்டம் செய்தவாறு இருந்தது. ராஜாங்கம் ரோடு வேஸ் முன்புறம் புகை கக்கியபடி நின்ற சரக்கு லாரியின் பின்புறம் முண்டாசு கட்டிய தொழிலாளிகள் வெறும் மேலுடன் கொசகொசத்தனர். ஆறாய் வழியும் வியர்வை இடுப்புத் துணி வழியாக இறங்குவது அறியாமல் சரக்குகளை இறக்க ஆரம்பித்தனர். இத்தனைக்கும் மத்தியில் உவேக்மேன் ஸ்கூலைத் தாண்டி அய்யாவு ஓட்டி வந்த டிவிஎஸ் எக்செல் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. அய்யாவுக்கு வயசாகி விட்டது. ஆனால் அதை மறந்து விட்டு ஓடியாடிக் கொண்டிருக்கிறார். விடுமுறையில் வீட்டுக்கு வந்த மகள் வயிற்றுப் பேத்தி, ஆசையாக நொங்கு கேட்டாள். அவளும் உடன் வருகிறேன் என்று தான் சொன்னாள். “இந்த பாழாப் போன வெயிலில் சின்னப்புள்ளயை எங்க கூட்டிட்டு போறீங்க” என்ற சகதர்மிணியின் சத்தத்தில் தாத்தாவும், பேத்தியும் அடங்கிப் போனார்கள். சாமி தியேட்டரை ஒட்டி ராஜாஜி ரோடு தென்வடலாக வெயில் ஆற்றை சுமந்து சென்றது.அய்யாவு வண்டி, இடப்பக்கம் திரும்பி சிஎஸ்ஐ சர்ச்சை நோக்கி சென்றது. சர்ச் வாசலில், வாகை மர நிழலில் நொங்கு வியாபாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும்.மானூர் செட்டியார் பஜ்ஜிக்கடையும் அருகிலேயே உள்ளது. கடையை நினைத்ததும் பெருங்காய மணம் வீசும் சூடான வாழைக்காய் பஜ்ஜி வாசம் மூக்கை துளைத்தது. நொங்கை வாங்கி விட்டு, பஜ்ஜி சாப்பிடலாமா? இல்லை பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டு நொங்கு வாங்க லாமா? என்ற யோசனையில், அய்யாவு வெய்யிலின் தாக்கத்தை மறந்து வண்டியை வேகப்படுத்தி இருந்தார். தூரத்தில் இருந்தே சர்ச் வாசல் வாகை மரம் தெரிந்தது. அய்யாவு, ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டிக் கொண்டு இருந்தார். அதை வாங்க மறுத்த நொங்கு வியாபாரி அறுபது ரூபாய் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் சிறு வயதுதான். காதில் பீடி செருகி இருந்தான். நல்ல கருத்த மேனி. அவன் அருகில் குழந்தையை மடியில் கிடத்தி அமர்ந்திருந்த அவன் மனைவி, நொங்குக்கு சேதாரம் இல்லாமல் பனங்காயை சீவிக்கொண்டிருந்தாள். விரித்து  வைத்திருந்த பனை ஓலைக் கூடைகளில் நொங்குகள் வரிசையாக சரிந்து கொண்டிருந்தன. நொங்கு வியாபாரி சலித்துக் கொண்டான். “ஏய்யா  பெரியவரே, நாலு நொங்கு இருபது ரூபாய்னு சொல்லித்தான பன்னண்டு நொங்கு கட்டிக்கொடுத்தேன். வாங்கி வச்சுகிட்டு பத்து ரூபாய புடிச்சிக்கிட்டா என்ன அர்த்தம். அறுபது ரூபாய்க்கு ஒரு பைசா கூட குறைக்க மாட்டேன்” என்றான். அய்யாவு அசடு வழிய சிரித்தார். பிறகு, “சரி பிடிப்பா நாளையும், பின்னையும் வந்தா பத்து ரூபாய வாங்கிக்குவாயாம்” என்றார். அதற்கு நொங்கு வியாபாரி ஒன்றும் பேசவில்லை. அவனது மனைவி, “வேகாத வெயிலுல மரம்மரமா ஏறி நொங்கு கொலைய வெட்டி கொண்டாறதுக்குள்ள உசுரு போயி உசுரு வருது. காட்டுக்காரன் சும்மாவா  நொங்கு கொடுக்குறான். ஊரப்பட்ட காச வாங்கிட்டுத்தான கொடுக்கறான்” என பொரிந்தவாரே பாளையறுவாளால், லாவகமாக பனங்காயை வெட்டி யதில், சிறு குழந்தையாய் நொங்கு சிரித்தது. அய்யாவு பத்து ரூபாய் வைத்து இருந்தார். கொடுத்து  விடலாம்தான். ஆனால் பெருங்காய பஜ்ஜி சாப்பிட முடி யாது. இங்கிருந்து பெரிய எண்ணைச் சட்டியில் பஜ்ஜியை  சுட்டு அரிகரண்டியில் செட்டியார் வாரி எடுப்பது கண்ணுக்குத் தெரிந்தது. “மானூர் செட்டியார் கடை பஜ்ஜி சாப்புட்டு எவ்வளவு நாளாச்சு” என அய்யாவுவின் மனம் ஏங்கியது. நொங்கு வாங்க அய்யாவு ஐம்பது ரூபாய் நீல நிற  நோட்டு ஒன்று மட்டும் கொண்டு வந்திருந்தார். அதுபோக  எப்போதும் அவசரத்திற்கு மேப்பாக்கெட்டில் விழுந்து கிடக்கும் இரண்டு ஐந்து ரூபாய் காசுகளுக்குத் தான் இப்பொழுது ஏக கிராக்கியாகி விட்டது. அடுத்தடுத்து நொங்கு வாங்கும் வாடிக்கையா ளர்களை வியாபாரியும் அவனது மனைவியும் கவ னித்துக்கொண்டு இருந்தனர். இவரைக் கண்டு கொள்ளவே இல்லை. மொத்தம் பனிரெண்டு நொங்கு களை பக்குவமாக பனை ஓலைகளில் மடித்துக்கொடுத்து இருந்ததை, அய்யாவு பத்திரமாக, வண்டி டேங்க் சீட் கவரில் வைத்து இருந்தார். ஆசை ஆசையாய் நொங்கு கேட்ட பேத்தியின் அழகான கண்கள் அவரை வீட்டுக்கு உடனே வரச்சொன்னது. நொங்கு வியாபாரியிடம் இனி பேசி பிரயோஜன மில்லை. அய்யாவுவைத் தவிர அங்கு வேறு யாரும் பேரம்  பேசவில்லை. இந்த வெயிலுக்கு, நொங்கு கிடைப்பதே பெரிய விசயம் என்பது போல வாங்கி சென்றனர். அய்யா வும் அந்த இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை கொடுத்து இருப்பார். இந்த பஜ்ஜி மட்டும் குறுக்கே வராமல்  இருந்திருந்தால், இன்னேரம் நொங்குடன் வீட்டுக்கு சென்றிருப்பார். அய்யாவு ஒரு கணக்குப் போட்டு பார்த்தார். இரண்டு  நொங்கை திருப்பிக்கொடுத்து விட்டால், பத்து ரூபாய்  கொடுக்க வேண்டியது இருக்காது, பஜ்ஜியும் சாப்பிட்டு விட்டு போகலாம். பார்த்து பார்த்து பொறுக்கி எடுத்து பனை  ஓலை பொட்டலம் கட்டிய பிறகு பத்து ரூபாய்க்காக பிரிப்பது நல்லாவா இருக்கும். இது என்ன பிச்சைக்காரத்தனம். அய்யாவு மனம் போராடிக்கொண்டிருந்தது. நொங்கு வியாபாரி நிமிர்ந்தே பார்க்கவில்லை. வாகை மரம் வட்டமாய் ஒரு குடையைப் போல ரோட்டில் நிழல் விரித்திருந்தது. நொங்கு வியாபாரம் மட்டுமல்ல, இளநீர், தர்ப்பூசணி, பலாப்பழம் என வரிசை கட்டி சிறு வியாபாரிகள் ஒரு சின்ன மார்க்கெட்டை உருவாக்கி இருந்தார்கள். எந்த சச்சரவும் இல்லாமல் அவரவருக்கு வேண்டியதை அமைதியாக வாங்கிச் செல்லும் அதிசயத்தை அய்யாவு சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். நொங்கு வியாபாரத்திற்கு தடையாக நிற்கும் அய்யாவு வின் குச்சிக்கால்களும், அருதப் பழசான எக்செல் வண்டி யும் வியாபாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. “யோவ் பெருசு என்னத்துக்கு இப்பிடி குறுக்க நின்னுகிட்டு உசுற  வாங்குற. கொஞ்சம் தள்ளி நில்லுய்யா. வேபாரம் நடக்கட்டும்” என்றான். அய்யாவுக்கு அவன் மரியாதைக் குறைவாக பேசியது மூக்குக்கு மேல் கோபத்தை வர வழைத்தது. அவர் என்னமோ பேச வாயெடுத்தார். அப்பொழுது அவரைத் தள்ளிக்கொண்டு, டீகேனுடன் உள்ளே வந்த வாலிபன், இரண்டு கப்புக்கள் நிறைத்து வியாபாரிக்கும் அவனது மனைவிக்கும் கொடுத்தான். வியாபாரியின் மனைவி கொடுத்த இருபது ரூபாய் தாளை பெற்றுக்கொண்டு அடுத்த கடையை நோக்கிப் போன டீ விற்கும் வாலிபன் ஒரு புரிதலுடன் சுலபமாக டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தான். கடைக்காரர்கள் இவன் வரவை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தது போல மிகவும் ரசனையுடன் சூடான டீயை மெல்லமாக அருந்திக்கொண்டு இருந்தார்கள். வெயில் உஷ்ணத்திற்கு பயந்து குளிர்ச்சியான ஆகாரங்களை ஜனங்கள் ஒரு பக்கம் தேடி வந்தால், மறுபக்கம் வெயிலைச் சிறிதும் பொருட்படுத்தாமல் சூடான டீயை அருந்தும் இவர்களின் போக்கு அய்யா வுக்கு முதலில் முரணாக இருந்தது. பிறகு சுடச்சுட பஜ்ஜி சாப்பிட ஆசைப்படும் தன்னோடு ஒத்துப் போவதை அறிந்து அய்யாவு முரண்பாட்டை புரிந்தவர் போல சமாதானமானார். செட்டியார், ஒரு அட்டு பஜ்ஜி தீர்ந்து மீண்டும் பஜ்ஜி போட ஆரம்பித்து இருந்தார். லேசாக வீசிய காற்றில் பஜ்ஜி வாசம் ரோடு முழுவதும் படபடத்து சென்றது. அய்யாவு அறுபது வருடத்திற்கு பின்னோக்கிப் போனார். அப்பாவின் கை விரல்களை பிடித்துக்கொண்டு பஜ்ஜிக் கடைக்கு சின்னப் பையனாக போனார். அப்பொழுது பெரிய செட்டியார் வழுக்கை தலையுடனும், பெரிய வயிற்றுடனும் இருந்தார். பெரிய வாணா சட்டி நிறைய சிவப்பு நிறத்தில் கடலை  மாவு கலந்து கலகலவென்று இருந்தது. ஒரே சீராக நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து செல்லக் குழந்தையை நீரில் முக்கி எடுப்பதைப் போல மாவில் போட்டு எடுத்து கொதிக்கும் எண்ணைச்சட்டிக்குள் நழுவ விட்டார். ஒன்று, இரண்டு, மூன்று..என எண்ணை சட்டிக்குள் உள்ளே போன பஜ்ஜி மாவை சிறுவன் அய்யாவு கண்கொட்;டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பக்குவமாக பஜ்ஜிகளை அரிகரண்டியால் புரட்டி புரட்டி வேகவைத்த பெரிய செட்டியார், பொன்னிறமாக பஜ்ஜி நிறம் மாறியதும் அரித்து துளைகள் நிரம்பிய தட்டில் போட்டார். எண்ணை வடிந்த பஜ்ஜியை வாழை இலைத் துண்டில் வைத்துக் கொடுத்தார். உடன் கெட்டி யான தேங்காய் சட்னி, கைவிரல்கள் பஜ்ஜி சூட்டுக்கு பதுங்குவதும் பாய்வதுமாக நர்த்தனம் ஆடியது. முதல் விள்ளலை எடுத்து தேங்காய் சட்னியை தொட்டு  வாய்க்குள் வைத்ததும், அய்யாவுக்கு ருசி பிய்த்துக் கொண்டு போனது. அப்பா ஒரு பஜ்ஜி தான் சாப்பிடுவார். அய்யாவு இரண்டு பஜ்ஜி சாப்பிடுவான். அய்யாவுக்கு, செட்டியார் கடை பஜ்ஜியுடன் அறுபது வருட தொடர்பு இருந்தது. பத்து ரூபாய்க்கு ஒரு பஜ்ஜி,  என்ன ஆனாலும் பரவாயில்லை, உட்கார்ந்து ஆற அமர சாப்பிட வேண்டும் என அய்யாவு தீர்மானித்துவிட்டார்.நொங்கு வியாபாரி முன்பு வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதியது. அவன் அய்யாவுவை கவனித்த தாக தெரியவில்லை. அய்யாவுவின் கையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டு வியர்வையில் நசநசத்திருந்தது. ரூபாயை சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டவர், நொங்கு வியாபாரத்திற்கு தடையாக இருக்கக்கூடாது என எக்செல் வண்டியை பஜ்ஜிக் கடையை நோக்கி கொஞ்சம் நகட்டிப் போட்டு தள்ளி நின்று கொண்டார். அய்யாவு தள்ளிப்போனதை நொங்கு வியா பாரி கண்டு கொள்ளவில்லை. வியாபாரம் மும்முரமாக  நடந்து கொண்டிருந்தது. “இப்பிடியே பஜ்ஜிக்கடைக்கு போய் பார்சல் வாங்கிக்கொண்டு அப்படியே போய்  விட்டால் என்ன” என அய்யாவுவின் மனம் சிந்தித்தது.  “அடக்கருமமே புத்தி ஏன் இப்பிடி எல்லாம்அலைமோதுது” என வெட்கப்பட்டவர் ஒரு முடிவுக்கு வந்தார்;. டேங்க் சீட் கவரில் இருந்த பனை ஓலைப்பொட்ட லத்தை கையில் எடுத்தார். கூட்டத்தை விலக்கிக்கொண்டு, வியாபாரியிடம் சென்றவர், “இதுல ரெண்டு நொங்கை எடுத்துக்கிட்டு, அம்பது ரூவாய வாங்கிக்க” என பணி வுடன்சொன்னார். வியாபாரி அய்யாவுவை ஏற இறங்கப் பார்த்தான். அவன் கையில் பிறை வடிவில் இருந்த பாளையருவா பனங்காயை வெட்டி வெட்டி பளபளவென்று வெய்யிலில் மின்னியது. வியாபாரியின் மனைவி இதைப் பார்த்து புன்ன கைத்தாள், “அந்த அம்பது ரூபாய் கொடுங்க பெரியவரே.  காசு இல்லைன்னா சொல்ல வேண்டியது தான, இந்த  ரெண்டு நொங்குல என்ன வந்திரப் போகுது, பொட்ட லத்தைப் பிரிக்காம வீட்டுக்கு கொண்டு போங்க, புள்ளைங்க சாப்பிடட்டும்” என எவ்வித சலனமும் இன்றி  வியாபாரி சாதாரணமாக கூறிவிட்டு அடுத்த வாடிக்கை யாளரை அணுகினான். வியாபாரி மனைவியின் முகத்தில் புன்னகை மாறவில்லை. அய்யாவு ஐம்பது ரூபாய் பணத்தைக் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார். அவரது பாக்கெட்டில் இருந்த இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்கள் அவரைக் கேலி செய்தவாறு இருந்தது. அய்யாவுவின் மனம் வெட்கப்பட்டதில் அவரது உடல் மேலும் வியர்த்தது. எக்செல் வண்டி பஜ்ஜிக் கடையை தவிர்த்து விட்டு வந்த வழியே திரும்பி வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. சூரியன் உச்சியில் இருந்து மேற்கே நகர்ந்து இருந்தது.