காசாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால் அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் 60 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், இஸ்ரேலிடம் அளித்தார். இஸ்ரேல் அரசு அதை ஏற்பதாக அறிவித்துள்ளது.
அந்த திட்டத்தில், இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைத்தல், தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பு இரண்டு கட்டங்களாக விடுவித்தல், இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தச் செயல் திட்டம் ஹமாஸ் அமைப்பிடம் அளிக்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக ஹமாஸ் விமர்சித்தது. அந்தத் திட்டத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், காசாவில் இருந்து இஸ்ரேல் படையினரை முழுமையாக வெளியேற்றுதல், காசாவுக்குள் போதிய அளவு நிவாரணப் பொருள்களை அனுமதித்தல் போன்ற தங்களின் அடிப்படை கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் திட்டத்தை ஏற்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வந்த ஹமாஸ் அமைப்பு, அந்தத் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், தங்களிடம் உள்ள 10 பிணைக் கைதிகளை விடுவிக்கவும், 18 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் தயார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கோரிக்கைகளுடன் அமெரிக்க செயல்திட்ட த்துக்கான தனது பதிலை சமர்பித்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்தது.
இது தொடர்பாக ஸ்டீவ் விட்காஃப் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க செயல்திட்டத்துக்கு ஹமாஸ் அமைப்பு அளித்த பதில் கிடைத்துள்ளது. அவர்களின் பதிலை முற்றிலும் ஏற்க முடியாது.
இந்த வாரத்தில் உடனடியாகத் தொடங்கக்கூடிய பேச்சுவார்த்தைக்கான அடித்தளமாக அமெரிக்காவின் செயல்திட்டத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும். வரும் நாள்களில் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவு செய்ய இது ஒன்றே வழி என்றார்.
காசா முனையில் உணவுப் பொருள்கள் மையத்தில் இஸ்ரேல் படைகள் ஞாயிறன்று துப்பாக்கிச்சுடு நடத்தின. இதில், 31 பேர் உயிரிழந்ததாகவும், 170 பேர் காயமடைந்ததாகவும், காசாவில் இதுவரை 54,381 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.