தருமபுரி, டிச.19- தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள இரண்டு கட்டிடங்கள் விவரங்கள், கட்டிடங்களின் உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆட்சியர் விரிவாக கேட்டறிந்தார். மிகவும் பழமையான, பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடத்தினை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விடுமுறை தினத்தில் இடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன்பின் ஆட்சியர் ச.திவ்யதர்சினி பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சீரமைக்கப்பட வேண்டிய பள்ளி கட்டங்கள், பள்ளி கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி கட்டடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி, வருவாய், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக்குழுவைக் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உள்ள கட்டிடங்களின் உறுதித் தன்மையை சரிபார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக, இந்த ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி, தருமபுரி வட்டாட்சியர் இராஜராஜன், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெரேசாள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.