districts

தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது குறித்த ஆய்வு துவக்கம்

சென்னை,மே 14-மருத்துவக் கழிவுகள் அகற்றம் தொடர்பாக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் ஆய்வை துவக்கியுள்ளது. தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் திட மற்றும் திரவ மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிக்கை கேட்டிருந்தது. மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்று இயங்குகிறதா, என்பது தொடர்பான முழு விவர அறிக்கையை மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழகசுகாதாரத்துறையிடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேட்டிருந்தது.இந்நிலையில் மருத்துவக்கழிவுகளை எப்படி முறையாக அகற்றுவது, மாசுகட்டுபாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெறாத மருத்துவமனைகள் பற்றிய விவரங்களைக் கண்டறிதல் தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம்மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குனர் அலு வலகத்தில் நடைபெற்றது.இதில் டி.எம்.எஸ். கூடுதல் இயக்குநர்கள் ஸ்வாதி, மாதவி, ஹரி சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.அப்போது மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான 9 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா? தடையில்லாச் சான்று உள்ளதா? தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டுள்ளதா? ஆகியவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.