கோவை, செப்.16- கோவை அருகே வழி தவறி வந்த புள்ளி மானை தெரு நாய்களிடமிருந்து இருந்து காப்பாற்றி அப்பகுதி மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். கோவை - ஆனைக்கட்டி சாலையில் தடாகம், கணுவாய், மாங்கரை, உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளன. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 வயது ஆண் புள்ளிமான் வழித்தவறி திருவள்ளுவர் நகருக்குள் வந்துள்ளது. அப்போது, மானை பார்த்த தெருநாய்கள் மானை துரத்தி கடித்துள்ளன. இந்த சத்தம் கேட்டு வந்து பொதுமக்கள் தெருநாய்களை துரத்தினர். இந்நிலையில், புள்ளிமான் அருகில் இருந்த ஒரு வீட்டில் வளாகத்திற்குள் சென்று பதுங்கியது. நாய் கள் கடித்ததால் மானின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தம் வெளியேறிய நிலையில், ஊர்மக்கள் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த வனத் துறையினர் மானுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மாங்கரை சோதனைச் சாவடிக்கு கொண்டு சென்றனர். இதனிடையே நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் விகேவி சுந்தரராஜிடம், அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.