உதகை, அக்.11- கள்ளச்சந்தையில் இயற்கை உரத்தை விற்ற 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் குடும்பத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் கொள்முதல் செய்யக்கூடிய தேயிலைகளை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தேயிலை விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறிட தமிழக அரசின் இன்கோ சர்வ் நிறுவனம் விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இயற்கை உரமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கிண்ணக்கொரை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 800 விவசாயிகள் அங்கத்தினராக உள்ள நிலையில், விவசாயிகளுக்கு வழங்க கொண்டு வரப்பட்ட இயற்கை உரத்தை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் பத்மநாதன், சிங்காரம், சிவராஜ் ஆகிய நிரந்தர தொழிலாளர்களும் ரமேஷ் என்ற தற்காலிக ஊழியரும் கள்ளச்சந்தையில் மொத்தமாக விற்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இயற்கை உரம் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து மூன்று நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒரு தற்காலிக ஊழியர் என 4 பேரை பணியிடை நீக்கம் செய்து ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.