districts

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) பெருங்காயத்தின் மருத்துவ பயன்கள் 

நாம் உணவில் மணமூட்டியாக சேர்க்கும் பெருங்காயம் ‘ஃபெருலா’ எனும் மர வகையின் பிசின். இது ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.தற்காலத்தில் நவீன மருத்துவத்திலும் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 70%  கார்போ ஹைடிரேட்டும் 5% புரதமும்  1% கொழுப்பு சத்தும்  7%தாதுப் பொருட்களும் அடங்கியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.இது தவிர கால்சியம்,சல்பர், பாஸ்பரஸ், ஆகியவற்றின் கூட்டுப் பொருட்களும் கரிம ஆல்கஹால் வகைகளும் உள்ளன. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் பெருங்காயம் செரிமானத்திற்கு உதவுவதாக தெரிகிறது.மேலும் புற்று நோய்க்கு எதிராகவும் பெண்களுக்கு ஏற்படும் சில நோய்களுக்கு நிவாரணியாகவும் பயன்படலாம் என்று கூறப்படுகிறது. இதிலுள்ள வேதிப்பொருட்களுக்கு ஆன்டி ஆக்சிடன்ட், பேக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு குணங்கள் உள்ளதாக தெரிகிறது.இதுவரை நாம் ஆப்கானிஸ்தானிலிருந்து பெருங்காயத்தை இறக்குமதி செய்துகொண்டிருந்தோம். இப்போது இமாச்சலப் பிரதேசத்திலுள்ள குளிர் நிறைந்த பாலைவன தட்ப வெப்ப நிலை இரான்,ஆப்கானிஸ்தானை ஒத்து இருப்பதால் ஆப்கானிஸ்தானிலிருந்து விதைகளை இறக்குமதி செய்து அறிவியல் தொழில் நுட்பக் கழக  (CSIR-IHBT) விஞ்ஞானிகள்  தங்களது ஆய்வுக்கூடத்தில் அதை வெற்றிகரமாக பயிர் செய்துள்ளனர். இமாச்சல பிரதேச விவசாயிகளுக்கு  இதைப் பயிரிட தொழில் நுட்ப வழிகாட்டுதல்களைக் கொடுத்தால் அவர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கலாம் என்று கூறுகிறார்கள். 

2 ) ரோபோ மருத்துவர் 

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் வடிவமைக்கப்பட்ட ஸ்டார் எனும் ரோபோ, மனித உதவி இல்லாமல் பன்றிகளுக்கு லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை செய்துள்ளது. நான்கு விலங்குகளுக்கு இந்த  அறுவை  சிகிச்சையை அது செய்தது.அறுவை சிகிச்சை யின்  முடிவுகள் மனிதர்கள் செய்வதை  விட சிறப்பான முறையில் இருந்தது. ஒளியை அடிப்படையாகக் கொண்ட முப்பரிமாண  எண்டாஸ்கோப்பும்  மெஷின் லேர்னிங் என்பதை அடிப்படையாகக் கொண்ட கண்காணிப்பு  அல்கோரிதமும் இந்த ரோபோவிற்கு வழிகாட்டுகின்றன.

3 ) கால் முளைத்தது 

ஒரு தவளையின் வெட்டப்பட்ட காலை, ஐந்து மருந்துகளின் கலவையைக் கொண்டு மீண்டும் வளர வைத்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர் குழு ஒன்று தெரிவிக்கிறது. கால்களை மீண்டும் இயல்பாக வளர்த்துக்கொள்ள முடியாத ஆப்பிரிக்க இனத் தவளைக்கு இந்த மருந்துகளைக் கொண்டு  24மணி நேர சிகிச்சை செய்யப்பட்டது. செயல்படக் கூடிய கால்கள் 18மாத காலத்தில் மீண்டும் வளர்வதற்கான  இயக்கம் அதன் உடலில் தொடங்கியது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.

4 ) கோவிட்-19 கண்டறிய புதிய முறை 

கொரோனா தொற்றிக் கண்ட றிய, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ஒன்றை ஜோத்பூர் ஐஐடி ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். நுரையீரலில் காணப்படும் கோளாறுகளை ஆய்வு செய்து சாதாரண நுரையீரலையும் கோவிட் தொற்றியிருக்கும் நுரையீரலையும்  வேறுபடுத்திக் காட்டும் அல்கோரிதம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார்கள். இந்த ஆய்விற்காக 2500எக்ஸ்ரே படங்களை ஆய்வு செய்து 96.8%  துல்லியமாக முடிவுகளை கூற முடிந்திருக்கிறது.   

5 ) சமையல் தொடங்கிய காலம் 

3500 ஆண்டுகளுக்கு முன், மேற்கு ஆப்பிரிக்காவில் சமைக்கப்பட்ட காய்கறிகள் பரிமாறப்பட்டதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.சரித்திர காலத்திற்கு முற்பட்ட  450 மட்பாண்டங்களை ஆய்வு செய்ததில்  அவற்றில் சில வற்றில் தண்ணீரில் கரையாத கொழுப்புப் பொருட்கள் இருப்பதைக் கண்டுள்ளார்கள். புதைபொருள் மட்பாண்ட ஆய்வில் இதுவரை கண்டதில் இந்த தாவர கொழுப்புகள் பலவகைப்பட்டவை என்கிறார் ஒரு ஆய்வாளர்.

6 )  நூற்றாண்டுகளின் விழா 

இந்த ஆண்டு(2022)  பல அறிவியல் நிகழ்வுகளின் நூற்றாண்டு தினமாக விளங்குகிறது என்கிறது சயின்ஸ் நியூஸ் எனும் இதழ்.அவற்றில்  சிலவற்றை பார்க்கலாம். பாரசீக கணிதவியலாளர் மற்றும் வானவியலாளர் அல்- நய்ரிசி அவர்களின் 1100ஆவது நினவு தினம். இவர் எழுதியது பலவும் பல காலம் முன்பே காணாமல் போயிற்று.ஆனால் மற்ற அறிஞர்கள் அவரது எழுத்தை குறிப்பிடுகிறார்கள்.பிரபல கிரேக்க கணிதவியலாளர் யூகிளிட்ஸ்ஸின் ‘Elements’ என்கிற கணித படைப்பின் மொழிபெயர்ப்பும் அதன் மீதான குறிப்புகளும் இவரது படைப்புகளில் எஞ்சியுள்ளன. யூகிளிட்ஸ்ஸின்  பிரபலமான கருதுகோளான ‘இணைகோடுகள் எங்கும் இணைவதில்லை’ என்பதற்கு   நிரூபணம் காட்டவும் இவர் முயற்சி செய்தாராம்.  1922இல் லெவிஸ் ஃபிரை ரிச்சார்ட்சன் என்பவர் வானிலையைக் கணிக்கும் சூத்திரங்களைக் கண்டுபிடித்தார். வெவ்வேறு  மழை அளவுகளுகளுக்குத் தகுந்தவாறு பாசி தோட்டங்களில் தேங்கும் தண்ணீரை வடிக்கும் அமைப்புகளை வடிவமைக்கும் பணியில் இருந்தபோது அதற்காக இவர் சில சூத்திரங்களை கண்டுபிடித்தார். அவற்றை வானிலை கணிப்பு போன்ற மற்ற பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தலாம் என்றயோசனை பிறந்தது.ஒரு நாளின் வெப்பம்,ஈரப்பதம்,காற்று அழுத்தம் இவற்றுடன் மற்ற வானிலை  தரவுகளைக் கொண்டு அடுத்த நாளின் வானிலையைக் கணிக்கும் சூத்திரத்தை கண்டறிந்தார்.இது குறித்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது முதல் உலகப் போர் மூண்டதாம்.அதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகப் பணிபுரிந்துவிட்டு பின் தனது புத்தகத்தை எழுதி முடித்தாராம்.  அணுக்களைக் குறித்த அடிப்படையான கருதுகோள்களை கண்டறிந்த நீல்ஸ் போர் 1922ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். அந்த ஆண்டே அவரது மகன் ஆகே போர் பிறந்தார். இவரும் அணுக்கள் குறித்த ஆய்வுகள் செய்து 1975ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். ஆகவே இந்த ஆண்டு இரண்டு நிகழ்வுகளின் நூற்றாண்டாக உள்ளது. நீல்ஸ் போர் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளால் விரட்டப்பட்ட அகதிகளுக்கு அடைக்கலம் தந்தவர் என்பது கூடுதல் தகவல்.