கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கோவையில் புத்தகப்பைகள் மற்றும் உணவு கொண்டு செல்லும் பைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூம் 14-ஆம் தேதியும், 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்க உள்ளன. இதனையடுத்து மாணவர்களுக்கு தங்களுக்கு தேவையான புத்தகப்பைகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நேரில் சென்று தங்களுக்கு பிடித்த புத்தகப் பைகளை வாங்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் தங்களுக்கு பிடித்த கார்ட்டூன் உருவங்கள் பொரித்த புத்தகப் பைகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கோவையை பொறுத்தவரையில் டவுன்ஹாலை அடுத்த 5 முக்கு சந்திப்பு பகுதியில் ஏராளமான புத்தக பை விற்பனை நிலையங்கள் உள்ளன.
இங்கு வெளி சந்தைகளிலிருந்து புத்தகப் பைகளை வாங்கி விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வியாபாரிகளே புத்தகப் பைகளை தயாரித்தும் விற்பனை செய்கின்றனர். இதனால் ஆன்லைன் விலையை விட குறைவாகவும், தரம் நிறைவாகவும் புத்தகப் பைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புத்தகப் பைகளை விற்பனை செய்து வரும் சாகுல் அமீது கூறியதாவது:-
கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை நடத்தி வருகிறோம். இந்தாண்டு வித்தியாசமான புத்தகப் பைகள் வந்துள்ளன. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதிலும் ,நேரில் வாங்குவதிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
எங்களைப் போன்ற கடைகளில் வாங்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நாங்கள் உடனடியாக செய்து கொடுக்கிறோம். இது போன்ற காரணங்களால் பொதுமக்கள் எங்கள் கடையில் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் பைகள் 70 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் , புத்தகப் பைகள் 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கும் மேலும் விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளி சீசன் என்பது மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஜூலை மாதம் வரை இருக்கும். அதன் பிறகு கல்லூரி சீசன் தொடங்கும். கொரோனா காலத்தில் நலிவடைந்திருந்த எங்கள் தொழில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு சாகுல் அமீது கூறினார்.