சேலம், ஜூன் 15- சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி ஸ்ரீ ஆதி திரௌபதி அம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான 33ஆவது ஆண்டு மாபெரும் ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதில் சேலம், சங்ககிரி, மேட்டூர் மற்றும் தருமபுரி பகுதியை சேர்ந்த 50அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் சோளம்பள்ளம் இளங்காளை அணியினர் முதலிடமும், முத்துநாயக்கன்பட்டி குணா பிரதர்ஸ் ஏ அணியினர் இரண்டாம் இடமும், தருமபுரி வள்ளல் அதியமான் அணியினர் மூன்றாம் இடமும், ஸ்டார் ராக்கர்ஸ் அணியினர் நான்காம் இடமும், இளம்புயல் அணி ஐந்தாம் இடமும், முத்துநாயக்கன்பட்டி குணா பிரதர்ஸ் பி அணியினர் ஆறாம் இடமும் பிடித்தனர். இதைதொடர்ந்து முதல் பரிசாக 10அடி உயரமுள்ள பரிசு கோப்பையை சின்னப்பகவுண்டர் நினைவாக சேட்டு வழங்கினார். 15 ஆயிரத்து ஒரு ரூபாயை கரிகாலவளவன் மற்றும் ராஜி என்பவர்கள் பரிசுத் தொகையை வழங்கினர். இந்த கபடி போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.