தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை தொழில் நகரமாக உள்ளது. இங்கு முதலீடு குறைவானாலும், அதிக வேலை வாய்ப்பு தருகின்ற சிறு, குறு தொழில்கள் ஏராளமாக உள்ளதால், பெயர் போன நகரமாக கோவை உள்ளது. இங்கு காந்திபுரம், ஆவாரம்பாளையம் கணபதி போன்ற பல்வேறு இடங்களில் சிறு, குறு நிறுவனங்களே அதிகளவில் உள்ளன. அப்படிப்பட்ட சிறு, குறு தொழிலில் முதன்மையான தொழிலாக பம்புசெட் மோட்டார் உற்பத்தி இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் உற்பத்தியாகின்ற பம்புசெட் களில் 80 சதவிகிதம் கோவையிலிருந்து தயாராகின்றன. ஆனால், சமீபமாக இந்தியாவில் உற்பத்தியாகின்ற பம்பு செட்களில் கோவையின் சராசரி 55 சத விகிதமாக குறைந்துள்ளது. முன்னதாக, தரமான கட்டமைப்பும், செயல் பாடுகளும் கொண்ட கோவை பம்பு செட்டுகள் இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு வாடிக்கை யாளர்களால் ஈர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பம்புசெட் தொழிலின் வர்த்தகம் ஆண்டொன்றுக்கு பத்தாயிரம் கோடி ரூபாயாக இருக்கின்றன. இப்படிப்பட்ட தொழில் கொரோனா பொதுமுடக்கத்தால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டன. கொரோனா பொது முடக்கம் முடிந்து, ஆர்டர்களை பெற்று தொழில் ஆரம்பித்த பம்புசெட் தொழில், தற்போது மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
பம்புசெட் தயாரிக்க முக்கிய மூலப்பொருட்களாக இருக்கும் இரும்பு, செம்பு, அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்களை பேக்கிங்க் செய்யும் அட்டை பெட்டிகள் உள்ளிட்ட அனைத்தின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கின்றன. அதாவது, முந்தைய ஆண்டில் விற்கப்பட்ட மூலப்பொருட்களின் விலையை காட்டிலும், இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்திருக்கின்றன. விண்ணை தொடும் நிலையில் உள்ள மூலப்பொருட்களை விலையை குறைக்க ஒன்றிய அரசு தற்போது வரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றன. மூலப்பொருட்களின் விலை உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் திட்டமிட்ட விலையில் பம்புசெட்டுகளை தயாரிக்க முடியால் நட்டத்தில் இயக்குகின்றன. அதேநேரம், மூலப்பொருட்களை விற்கின்ற தொழில் நிறுவனங்களின், ஆண்டு நிகர லாபம் ஆயிரம் மடங்கு உயர்ந்திருப்பதாகவும், இந்த நெருக்கடியைத் தவிர்க்க பம்புசெட் தயாரிப்பு தொழில் முனைவோர்களுக்கு, குறைந்த விலையில் மூலப்பொருட்கள் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அரசிற்கு முன்வைத்துள்ளனர். மேலும், தொழில் நிறுவனங் களில் 30 சதவிகித பணிகள் மட்டுமே நடப்பதாகவும், வேலை குறைந்திருப்பதாக வும் தெரிவித்திருக்கின்ற தொழில் முனைவோர், இந்த நிலை மாறாவிட்டால் தொழில் நெருக்கடி அதிகமாகி சிறு, குறு தொழில்கள் முடங்குமென தெரிவிக்கின்றனர்.
அண்மைகாலமாக, திட்டமிட்ட விலையில் ஆர்டர் தந்தவர்களுக்கு பம்புசெட் மோட்டார் தயாரித்து தர முடியாமலும், வாரம் வாரம் விலை பட்டியல் மாற்றி தருவதனால், நிலையான ஆர்டர்கள் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். ஆண்டின் மார்ச் மாதமே சீசன் ஆரம்பித்து, பம்புசெட் மோட்டார் உற்பத்தி அதிகரித்து வர்த்தகம் கொடிகட்டி பறக்க வேண்டிய நிலையில், நடப்பாண்டில் தொழில் மந்தமாக இருக்கின்றன. இதனால் தொழிலாளர்களின் வேலை நேரம் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்தும், இந்நிலை நீடித்தால் வேலையில்லா திண்டாட்டமும் ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர். ஆகவே, லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரம் தருகின்ற பம்புசெட் தயாரிப்பு தொழிலை மீட்க கோவையின் அடையாளமாக திகழும் பம்புசெட் தயாரிப்பை காப்பாற்ற அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பம்புசெட் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அ.ர.பாபு