districts

img

மூலப்பொருட்களின் விலை கடும் உயர்வு - ஒன்றிய அரசுக்கு எதிராக திரளும் கோவை தொழில் அமைப்புகள்

வரலாறு காணத வகையில் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் சிறுகுறு தொழில்கள் ஒன்றிய அரசிற்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு கோவை தொழில் அமைப்புகள் ஒன்றாக கைகோர்க்கின்றன.

நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரும் 20-ம் தேதி ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதன்தொடர்ச்சியாக கோவையில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டத்தை வலுவாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக ரூ.25 ஆயிரம் கோடி வரை உற்பத்தி பாதிக்கப்படும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம், ஏற்றுமதியில் 48 சதவீதம் பங்களிப்பு அளிப்பதோடு, ரூ.12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாகவும், ரூ.40 கோடி பேர் சார்ந்திருக்கும் துறையாகவும் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக வார்ப்பட தொழிலுக்கு தேவையான இரும்பு மூலப்பொருள் தொடங்கி, தேனிரும்பு, அலுமினியம், தாமிரம், பேக்கிங் காகிதம், பிளாஸ்டிக் என அனைத்து மூலப்பொருட்களும் வரலாறு காணாத அளவிற்கு பல மடங்கு விலை ஏறியுள்ளது. 

இதனால் நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் பல சிறுகுறு தொழில் நிறுவனங்கள் நடத்த இயலாமல் விழிபிதுங்கி உள்ளனர். தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல் நோ ஒர்க் என்கிற அடிப்படையில் பல ஆயிரக்கணக்கானோரின் வேலை மற்றும் வாழ்வாதாரம் பறிபோயுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து தொழில் அமைப்புகள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக மூலப்பொருட்களின் விலை மட்டும் எவ்வித கட்டுப்பாடுமற்று ஏறிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், 20-ம் தேதி மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்து டிசம்பர் 20 ஆம்தேதி நாடு முழுவதும் உற்பத்தி நிறுத்தம் மற்றும் போராட்டத்திற்கு அனைத்து சிறுகுறு, நடுத்தர தொழில்கள் 150க்கும் மேற்பட்ட தொழில்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.

இதன்தொடர்ச்சியாக கோவையிலிருந்து கொடிசியா, தென்னிந்திய பொறியியில் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) இந்தியத் தொழில் வர்த்தக சபை (கோவை கிளை), டாக்ட் (கோவை கிளை), காட்மா, கோப்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் இந்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து தொழில் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் காணாமல் முற்றிலும் முடங்கிவிடும். ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என அடுத்தடுத்த தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளோம். 

கடந்த 3 மாதங்களாக பொருளாதாரம் மந்தமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்களிடம் வாங்கும் திறனும் குறைந்துள்ளது.

மூன்று 'ஷிப்ட்'கள் இயங்கிய தொழில் நிறுவனங்களில் தற்போது ஒரு 'ஷிப்ட்க்கே வேலை கொடுக்க முடியாமல் இருக்கிற தொழிலாளர்களை ஒருநாள் நோஒர்க் என்கிற முறையில் வேலை கொடுத்து வருகிறோம்.

லாபத்திற்காக தொழில் நடத்திய காலம் போய் தற்போது கௌரவத்திற்காக தொழில் நடத்தும் நிலைக்கு வந்துள்ளோம். ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் எந்த நடவடிக்கையோ, முன்னேற்றமோ இல்லை. . இதற்கு முன்பு எவ்வளவோ கஷ்டங்களை தொழில் அமைப்புகள் எதிர்த்து வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இதுபோன்ற நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை.

ஆகவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால் ரூ.25 ஆயிரம் கோடி வரை அன்றைய தினம் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கோவையில் மட்டும் 50 ஆயிரம் நிறுவனங்கள் வரை இதில் பங்கேற்கவுள்ளன. நாடு முழுவதும் இருந்து அனைத்து அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேறு வழியே இல்லாத நிலையில்தான் தற்போது போராட்ட களத்திற்கு வந்துள்ளோம். இதனை புரிந்து கொண்டு ஒன்றிய அரசு எங்களின் நியாமான கோரிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

 

;