districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இறந்த பெண்ணிற்கு ஆறு நாட்கள் சிகிச்சையா?

தனியார் மருத்துவமனையில் போராட்டம்

சேலம், டிச. 13- சேலத்தில் இறந்த பெண்ணிற்கு ஆறு நாட்கள் சிகிச்சை  அளித்ததாக குற்றஞ்சாட்டி, தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர்  மாதேஸ்வரன். இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி வனிதா. இருவருக்கும் மூன்று பெண்  குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு  மாதத்திற்கு முன்பாக வனிதாவை மனநலம் பாதிக்கப் பட்டு விட்டதாக கூறி வனிதாவின் பெற்றோரிடம் ஒப்படைத்து  விட்டு மாதேஸ்வரன் சென்றுள்ளார். பின்னர், வனிதா தருமபுரி மருத்துவமனையில் பரிசோத னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மூளை  காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிய வருகிறது. இதையடுத்து, வனிதாவை அழைத்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர்  வனிதாவின் உறவினர்கள் தகராறு செய்த நிலையில் மீண்டும்  அவரது கணவர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ளார். பின்னர், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  கடந்த ஆறாம் தேதி வனிதா உயிரிழந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் உறவினர்களிடம் வனிதா இறந்ததை  தெரிவிக்காமல் தொடர்ந்து தவணை முறையில் பணம் பெற்று  வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்களன்று வனிதா இறந்து விட்டதாக  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால், ஆவேச மடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவ மனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அஸ்தம்பட்டி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். பின்னர் வனிதாவின் சடலத்தை சேலம் அரசு மருத்துவ மனைக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர் இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கஞ்சா, லாட்டரி விற்பனை: 4 பேர் கைது

கோவை, டிச.13- அன்னூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறையினர் கைது  செய்தனர். கோவை மாவட்டம், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில்  தடை செய்யப்பட்ட ஆன்லைன் மற்றும் வெளிமாநில லாட் டரிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் ஆய்வாளர் நித்யாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் உதவி  ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், செல்வராஜ்  உள்ளிட்ட போலீ சார் கரியாம்பாளையம், வடக்கலூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ண கவுண்டன்புதூர், எல்லப்பாளையம், வடக்கலூர் உள்ளிட்ட  பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக ராஜேந்திரன் (53), பத்ரன் (72), ஈஸ்வரன் (54) ஆகிய 3 பேரை  பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 3  பேரும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டுகள், பில் புத்தகங்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.8 ஆயிரத்து 890யையும்  போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று, அன்னூரை அடுத்துள்ள பொன்னே கவுண்டன்புதூர் பகுதியில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசார ணையில் அவர் கோவை சென்னப்பசெட்டிப்புதூர் பகுதி யைச் சேர்ந்த நவீன்குமார் (18) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா வினை பறிமுதல் செய்தனர்.

நில மோசடி:  நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல் துறை

ஈரோடு, டிச.13- சலங்கபாளையம் பகுதியில் வீட்டுமனை  விற்பனையில் மோசடி செய்து வருபவர் மீதான புகாரினை காவல் துறை பதிவு செய்ய  மறுப்பதாக குற்றம்சாட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்வர்கள் மனு அளித்தனர். ஈரோடு அருகே திண்டலைச் சேர்ந்த வர்கள் ரவிச்சந்திரம் மற்றும் கோவிந்தராஜ் சகோதரர்கள். இவர்கள் பவானி வட்டம், சலங்கபாளையம் பகுதியில் அன்பு நகரம் எனப் பெயரில் விற்பனை செய்யப்பட்ட பிளாட்டுகள் 2ஐ வாங்கினர். இதனை விற் பனை செய்த பாண்டியம்பாளையம் ஈஸ்வரன், அன்பு நகர் என்பதை பெயர் மாற்றி  அந்நிலத்தை வேறு நபர்களுக்கு விற்றுள் ளார். இம்மோசடி குறித்து கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தால் பதிவு  செய்ய மறுக்கின்றனர். எனவே, நில மோசடி  செய்தவர் மீதும், புகாரை பதிவு செய்ய மறுக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சகோதரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டனர்.

புதரில் கொட்டிக்கிடந்த 100 கிலோ ரேசன் அரிசி

உதகை, டிச.13- உதகை அருகே புதரில் கொட்டிக்கிடந்த 100 கிலோ ரேசன் அரிசி குறித்து, மாவட்ட  வழங்கல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில்  400க்கும் மேற்பட்ட  நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வரு கின்றன. இக்கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி,  சர்க்கரை உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக் கப்பட்டு வருகின்றன. ரேசன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட் கள் விநியோகிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி, கண்காணித்து வருகின்றனர். இதேபோல் ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை போன்ற  மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு அதி களவில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உதகை அருகே ஆர்.கே.புரம்  சாலையில் தனியார் பள்ளி எதிரே உள்ள புதரில், பொது விநியோக திட்டத்தின் கீழ்  வழங்கப்படும் இலவச அரிசி கொட்டப்பட்டு  கிடந்தது. சுமார் 1000 கிலோ இலவச அரிசி  கொட்டப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட வட்ட  வழங்கல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி தலைமையிலான வழங்கல்  துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு  மேற்கொண்டனர். மேலும், அரிசி சரியில் லாததால் கொட்டப்பட்டதா? அல்லது கடத்த லுக்கு கொண்டு செல்லும்போது அதிகாரி களிடம் சிக்காமல் இருக்க கொட்டப்பட் டுள்ளதா? என்று விசாரித்தனர்.  இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர்  வாசுகி கூறுகையில், ஆய்வு மேற்கொண் டதில் சுமார் 100 கிலோ அளவுக்கு ரேசன்  அரிசி கொட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து  தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி

நாமக்கல், டிச.13-  நாமக்கல் மாவட்டம்,  சீராப்பள்ளி பேரூராட் சிக்குட்பட்ட தேவஸ்தான புதூரை சேர்ந்தவர் முத்து சாமி (48). இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு  கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக குறுந்தகவல்  அடிப்படையில், ரூ.12 லட்சம் கொடுத்துள்ளார்.ஆனால் , சீட்வாங்கி தரவில்லை.  ஏமாற்றப்பட்டதை அறிந்த  முத்துசாமி,நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள் ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.49/60அடி நீர்வரத்து:725கன அடி வெளியேற்றம்:715கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.21/90அடி.நீர்வரத்து:1439கனஅடி வெளியேற்றம்:1755கனஅடி

1330 திருக்குறள் முற்றோதல்: மாணாக்கர்களுக்கு அழைப்பு

திருப்பூர், டிச. 13 – தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 1330  குறட்பாட்களையும் மனப்பாடம் செய்து ஒப்பு விக்கும் திறன் பெற்ற பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார். 1330 குறட்பாட்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்குத் தலா ரூ.10 ஆயி ரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகி யவை தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோ றும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண் டிற்கு மாணவ, மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. இந்த முற்றோதலில் பங்கேற்கும் மாண வர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும்  திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக் குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள்  எண், குறளின் பொருள், திருக்குறளின் அடை மொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை  எழுதியோர் போன்றவை தெரிந்து இருந்தால்  கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.  முற்றோதலில் பங்கேற்கும் மாணவர்கள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன றிக் குழுவின் முன்னிலையில், நேராய்வுக்கு  உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்கு உரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக் குநருக்கு பரிந்துரைக்கப்படும். இதில், ஏற்க னவே பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும்  பங்கேற்க இயலாது. இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூர்  மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்  அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது  தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத் தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 31 ஆம்  தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ் சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம். 

சிறந்த அரசு பள்ளிகளுக்கு கேடயம்

திருப்பூர், டிச.13- திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்ந்தெ டுக்கப்பட்ட பள்ளிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திங்களன்று பாராட்டி கேடயம் வழங்கினார்.  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில்  முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் 13 பள்ளி  ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயம், உத்தமபாளையம் அர சுப்பள்ளி தலைமையாசிரியர்க்கு பள்ளியின் உட்கட்டமைப்பு  மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.25.00 இலட்சம்  பெற்றமைக்காக பாராட்டு கேடயமும், வெள்ளகோவில் வட் டாரக்கல்வி அலுவலகத்தில் தட்டச்சராக சிறப்பாக பணி யாற்றி ஒய்வு பெற்ற தட்டச்சர் அவர்களுக்கு பாராட்டுக்கேடய மும் மு.பெ.சாமிநாதன் அவர்கள் வழங்கினார்கள். இவ்விழாவில், தமிழக ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பின்  மாவட்ட செயலாளர் கோ.பிரபாகர், உத்தமபாளையம் தலை மையாசிரியர் மனோண்மணி, ஆசிரியர்கள் அ.மேரி மலர்  அரசி, க.அ.சாந்தி, ச.மாஸ்டர் ஆனந்த், ச.ஜெகதீஷ் சங்கர்,  இரா.கலைச்செல்வி, த.சத்யா, மா.தில்லைநாயகி,  கு.நதியா, கா.மோகனாம்பாள், தே.இளங்கோ, செ.ரவி, ஆர். முருகேஸ்வரி, பி.கார்த்தி, தட்டச்சர் புவனேஷ்வரி, பள்ளி ஆசி ரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டார்கள்.

அடிப்படையற்ற புகாரின் மீது நடவடிக்கையா? சிஐடியு குற்றச்சாட்டு 

ஈரோடு, டிச.13- ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் பழிவாங்கும் நோக்கில், அடிப்படையற்ற புகாரின் மீது நடவடிக்கை எடுப்ப தாக சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டி யுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட மதுபான சில்லரை விற்பனை கடை கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பணியாற்றும் ஊழியர் களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் செவ்வாயன்று மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகா மில் கலந்து கொண்டு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, கடை எண்.3536ல் பணியாற்றி வந்த விற்பனையாளர் ராஜேந்தி ரன், உதவி விற்பனையாளர் வெங்கடேசன் அடிப்படை யற்ற புகாரின் மூலம் ஒரு தலைப்பட்சமாக கிடங்கு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். விதிமுறைகளுக்கு மாறாக 8 மாதங் களாக கிடங்கு பணியில் உள்ளவர்களை மீண்டும் அதே கடைக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும். சத்தி வட்டம், இன் டியம்பாளையம் கடை எண்.3697ல் கடந்த நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் எவ்வித விசாரணையுமின்றி விற்ப னையாளர் முருகேசன் மீது குற்றம்சுமத்தப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் பணியில் சேர்ந்துள்ள  இவருக்கு தற்காலிக பணி நீக்க காலத்திற்கு உயிர் வாழ்படி வழங்க வேண்டும். மேலும் கொள்ளையடிக்கப்பட்டதாக இவரிடம் பெற்ற பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும். கடை எண்.3514ல் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார் வி.பாண்டி யன். இவர் மீது எவ்வித புகாரும் இல்லாத நிலையில் நிர்வாகக் காரணம் என வேறு கடைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். சங்கத்தின் பொது செயலாளராகவும் செயல்பட்டு வரும் பாண்டியன் பணியிட மாறுதல் என்பது பழிவாங்கும் நடவ டிக்கையாகும். எனவே அவர் மீண்டும் பழைய கடைக்கே பணி யிட மாறுதல் செய்ய வேண்டும். மேலும் கடை வாடகை, மின்  கட்டணம் ஆகியவற்றிற்கான முழு தொகையும் நிர்வாகமே கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதி தடை விதிக்க பொள்ளாச்சி எம்.பி., கோரிக்கை

திருப்பூர், டிச.13- உள்நாட்டு தென்னை விவசாயிகள் நல னைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு தேங் காய் எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சண்முகசுந்த ரம் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளார். பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சண்முகசுந்தரம் ஒன்றிய வேளாண்மைத் துறை செயலர் மனோஜ் அகு ஜாவுக்கு திங்களன்று எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கர்நா டகம், தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநி லங்கள் தென்னை சாகுபடியில் முன்னிலை யில் உள்ளன. தமிழகத்தில் 4.65 லட்சம் ஹெக் டேரில் 3ஆயிரத்து 751 டன் தேங்காய் சாகு படி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி தொகுதி தென்னைக்கு உலகப் புகழ் பெற்ற பகுதியாகும். தமிழகத்தின் தென்னை சாகு படியில் இப்பகுதி பிரதான பங்களித்து வரு கிறது. கடந்த ஓராண்டு காலமாக கொப்ப ரைத் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது தற்போது தேங்காய் மற்றும் கொப்ப ரைத் தேங்காய் விலை 50 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.  குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தை யில் ஒரு தேங்காய் ரூ.16க்கும், கொப்பரை ஒரு கிலோ ரூ.150க்கும் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு தேங்காய் ரூ.8க்கும், கொப்பரை கிலோ ரூ.80க்கும் விற்பனை ஆகி றது. அதேசமயம் யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்களின் விலை உயர்ந்து கொண்டே செல் வதுடன், வேலையாட்கள் செலவும் சேர்ந்து 50 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இத னால் விவசாயிகள் மிக மோசமாக பாதிக் கப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளை ஈ உள்ளிட்ட பூச்சித் தாக்குதல் காரணமாக கடந்த சில மாதங் களாக தென்னை உற்பத்தி குறைந்துள்ளது.  

இத்தகைய சூழ்நிலையில் அரசின் திட்டங் களோ, இதர மானியங்களோ இல்லாத தால் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் தென்னை உற்பத்தி 50 சதவிகிதம் அளவுக்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அத்து டன் தாவர எண்ணெய் இறக்குமதிக்கு வரி இல்லை என்ற அரசின் முடிவும் சேர்ந்து தென்னை சாகுபடி விவசாயிகளை  கடுமையாக பாதித்துள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கான கேட்பு (டிமாண்ட்) குறைந் துள்ளது. தற்போது சந்தையில் கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.75 என்ற அளவி லேயே உள்ளது. நபார்டு 50 ஆயிரம் டன் கொப் பரை கொள்முதல் செய்வதாக சொன்ன நிலையில் இந்த விலையில் நீடித்துக் கொண் டிருக்கிறது. இதுவும் இல்லாவிட்டால் சந்தை விலை இன்னும் வீழ்ச்சி அடையும். கொப்ப ரைக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.105.95 என்பது மிகவும் குறைவாகும். தற்போதுள்ள சூழ்நிலையின் தன்மை யைப் புரிந்து கொண்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். சந்தை விலை குறைந்த பட்ச ஆதார விலையை விட சற்று அதிக ரிக்கும் வரையிலாவது இந்த தடை நீடிக்க வேண்டும். அத்துடன் அரசுத் திட்டங்கள் மற் றும் பொது விநியோக முறையில் தேங்காய் எண்ணெய் விநியோகம், பயன்பாட்டையும் ஒன்றிய அரசு பரிசீலித்து தென்னை விவசாயி கள், எண்ணெய் உற்பத்தியாளர் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண் டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

60 ஆண்டுகளாக வடிகால் வசதி இல்லை ஆட்சியரிடம் அவரகண்டி மக்கள் முறையீடு

உதகை, டிச.13- அவரகண்டி கிராமத்தில் 60 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் மற்றும் நடைபாதை வசதி இல்லை என்றும், இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியர் அலுவலகத்தில் பிக் கட்டி பேரூராட்சிக்குட்பட்ட அவரகண்டி பொதுமக்கள், ஊர்  தலைவர் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, அவரகண்டி கிராமத்தில் சுமார் 140 குடும்பங்கள் உள் ளன. தாழ்த்தப்பட்ட மக்களாகிய நாங்கள் சுமார் 60 ஆண்டு காலமாக இங்கு வசித்து வருகிறோம். ஆனால், இதுநாள் வரை இங்கு நடைபாதை, சாக்கடை கால்வாய் வசதிகள் ஏற்ப டுத்தி தரவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இங்கு வாழும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என் றால், சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று தான், பிரதான சாலைக்கு வர வேண்டும். அதேபோல் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் அருகிலுள்ள கவுண்டம்பாளையம் வரை நடந்து செல்ல வேண் டும். மற்ற நாட்களில் குழந்தைகள் சாதாரணமாக நடந்து சென்று விடுகின்றனர். ஆனால், மழைக்காலத்தில் குழந்தை கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடன் பிரச்சனை: தீக்குளிக்க முயன்ற பெண் 

தருமபரி, டிச.13- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  குறைதீர்க் கும் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தாய் மற்றும் மகன் ஆகியோர் உட லில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து விசாரித்ததில், தருமபுரி மாவட்டம், அமானி மால்லாபுரத்தை சேர்ந்த மாதம்மாள் (48), மகன் கோபி (16) என்பது தெரிய வந்தது. மேலும், மாதம்மாள் அதேபகு தியை சேர்ந்த மாது (50) என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் கடனாக ரூ.2.50 லட்சம் வழங்கியுள்ளார். அவர், இதுவரை  அசல் பணத்தை திருப்பி தரவில்லை என மாரண்டஹள்ளி போலீசாரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.  இதனால் மனமுடைந்த மாதம்மாள், மாரண்ட அள்ளி  போலீசாரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத் தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பருத்தி ஏலம்

நாமக்கல், டிச.13- ராசிபுரத்திலுள்ள ஆர்சி எம்எஸ் சங்க கிளை வளாகத் தில் திங்களன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், ஆத் தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள் ளிட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண் டனர். இந்த ஏலத்தில் 411  பருத்தி மூட்டைகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் ஆர்சிஎச் ரகப் பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7  ஆயிரத்து 619 முதல் ரூ.8 ஆயிரத்து 919 வரையும், கொட்டு ரகப்பருத்தி ஒரு  குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.2 ஆயிரத்து 950க்கும் ஏலம் போனது.