அவிநாசி, பிப்.21- அவிநாசி அருகே இளம்பெண்ணிடம் ஆபாச அழைப்பு விடுத்த காவலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சுப்பிரமணி (38) என்ற காவலர், அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது, அவரது அலைபேசி எண்ணையும் பெற்றுச் சென்றுள்ளார். இதன்பின்னர் பெண்ணின் அலைபேசிக்கு அழைத்த காவலர் சுப்பிரமணி, அப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசி குறிப்பிட்ட பகுதிக்கு தனியாக வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காவலர் கூறிய இடத்திற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாலியல் அழைப்பு விடுத்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.