உதகை, செப்.17- விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு, உதகையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு நடைபெற்ற ஊர்வலத்தின் போது இந்து அமைப்புக்களால் சில ஆண்டுகளுக்கு முன்பு உதகையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது.. அதன்படி, நடப்பாண்டு இந்து முன்னணி சார்பில் உதகை நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடிமட்டம், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. உதகையில் இந்து முன்னணி சார்பில் வரும் 20ஆம் தேதியன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்படும். இந்த ஊர்வலத்தின்போது பதற்றமாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்ட போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் கொடி அணிவகுப்பு, உதகையில் நடைபெற்றது. தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. அதேபோல காந்தலிலும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணி வகுப்பில் ஆயுதம் ஏந்திய போலீசார் பங்கேற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பி.யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.