districts

img

ஆற்றில் இறங்கி பெண் உடல் அடக்கம் தரைப்பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை

தருமபுரி, நவ.13- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொதுமக்கள் ஆற்றில் இறங்கி பெண் உடலை அடக்கம் செய்து வரும் நிலையில், ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கொக்க ராப்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்டது குமாரபாளையம். இந்த பகுதியில் பட்டியல் இன மக்கள் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள், இறந்தால் உடலை அருகிலுள்ள பீணியாற்றை கடந்துதான் எடுத்துச் சென்று அடக்கம் செய்வர். கடந்த வாரம் முழுவதும் பருவமழை வலுவாக பெய்து வருவதால் பீணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த கலைசெல்வி என்பவர் மரணமடைந்தார். இவரது உடலை உறவினர்கள் சுமந்து கொண்டு மாற்றுப்பாதை இல்லாததால் ஆற்றில் இறங்கி ஆபத்தான முறையில் சுமந்து சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. பட்டியல் இன மக்கள் என்பதால் மாற்றுப்பாதை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டனரா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாற்று பாதை இல்லாத நிலை இருந்தால் உடனடியாக அரசு ஆற்றில் தரை பாலம் அமைத்து கொடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.