வன உயிரின பாதுகாப்பு வாரத்தையொட்டி, விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருபகுதியாக. வனத்துறையினருன் இணைந்து, ஊடகவியலாளர்கள் வனப்பகுதியில் வியாழனன்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் வனவிலங்கு பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு வார விழா இரண்டாம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள், பொதுமக்கள் இடையே வன விலங்குகள், காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வனத்துறையுடன் இணைந்து கோவை போளுவம்பட்டி வனச்சரகம் சாடிவயல் பகுதியில் தூய்மை பணி இயக்கம் நடைபெற்றது. சாடிவயல் பகுதியில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
முன்னதாக, கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், உதவி வனப் பாதுகாவலர்கள் தினேஷ், செந்தில்குமார் ஆகியோர் காடுகள், வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் ஏராளமான ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.