தூய்மைப்பணியாளர் புகார் கோவை, பிப்.13- ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்காமல் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் அலைகழிப்பு செய்வதா குற்றம்சாட்டி தூய்மைப் பணியாளர் தனது மகன் வழக்கறிஞருடன் வந்து மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கோவை மாநகராட்சி 82 ஆவது வார்டில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றனர். இதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை மற்றும் ஓய்வூதியங்கள் இதுவரை எதுவும் வரவில்லை. அதை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து, கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் கிரிஜா என்பவரை அணுகிய போது, இது தங்களுக்கு தெரியாது என கூறிவிட்டார். மேலும், இடைத்தரகர்கள் மூலம் அதற்கான பணிகளை முடித்துவிட்டு ஆவணங்களை சமர்ப்பித்தால் மேற்கொண்டு பணிகளை செய்வோம் எனவும், அதற்கு 20 ஆயிரம் அல்லது அதற்கும் மேல் செலவாகும் என அலட்சியமாக பதில் அளித்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்று, உயர் அதிகாரியான மத்திய மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமரனிடம் தெரிவிக்க சென்றால், தங்களை நீண்ட நேரமாக காக்க வைத்தது மட்டுமில்லாமல், தங்களை கண்டு கொள்ளாமல் சென்று விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது தாய் மற்றும் தந்தைக்கு வரக்கூடிய ஓய்வூதிய தொகையைக் கொண்டு அவர்களது மருத்துவச் செலவுகளை பார்த்துக் கொள்ள இயலும். இந்த தொகை கிடைக்காததால் பெரும் சிரமமாக உள்ளோம். மேலும் தனது தந்தையார் நடக்கக்கூட இயலாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், இப்படிப்பட்ட நேரத்தில் அதிகாரிகள் மிக அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள் என அதில் தெரிவித்துள்ளார். எனவே, மாநகராட்சி ஆணையாளர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை விரைந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலட்சியமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.