districts

img

சாதாரண வாழ்க்கை வாழ வழி விடுங்கள்: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா

கடன் வசதி  மற்றும் தொழில்கடன் , இலவச ஆடு,மாடு வழங்கிடக்கோரியும், வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து திருநங்கைகள் கூட்டமைப்பினர் பொள்ளாச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி திருநங்கைகள் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சியில் 25 திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

ஆனால் அதில் தற்போது வரை மூன்று பேர் மட்டுமே வீடு கட்டியுள்ளனர். மீதமுள்ள திருநங்கைகள் வங்கி கடன் மூலமாக வீடு கட்ட விண்ணப்பித்தால் குறைந்தது ஒரு இலட்சம் அளவில் அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டுமென வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். அன்றாடம் பிழைப்பிற்கே யாசகம் பெற்று வாழ்வாதாரம் நடத்துகின்ற திருநங்கைகளால் ஒரு இலட்சத்தில் வீட்டு அஸ்திவாரம் அமைப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

இதனால் பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகட்டும் திட்டத்தில் நிதி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

வீடுகளின்றி வாழும் திருநங்கைகளுக்கு இதுவரை தொகுப்பு வீடுகள் கூட கட்டித்தருவதற்கு அரசு முன்வரவில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் படி ஒரு திருநங்கைக்கு கூட பலனுமில்லை.

இது தொடர்பாக பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்குவதற்கு ஆடு, மாடு வழங்கிட  கோரி பலமுறை சார் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தும் செவி சாய்க்கவில்லை.

திமுக அரசு திருநங்கைகள் வாழ்க்கையை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது.ஆனாலும் பொள்ளாச்சி சார் ஆட்சியர்  ஒருமுறை கூட உதவ முன்வரவில்லை.திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் பெற அரசாணை வெளியிட்டு பல வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்றளவும் அதற்கான நடவடிக்கைகள் இல்லை. பொள்ளாச்சி பகுதியில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் பறிபோகும் வகையில் உள்ளது.

எனவே தமிழக அரசும், கோவை மாவட்ட ஆட்சியரும் உடனடியாக தலையீடு செய்து திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்படுத்த வேண்டும்.என இவ்வாறு அதில் கூறிப்பட்டிருந்ததது.

முன்னதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சகோதரி அறக்கட்டளை நிறுவனர் கல்கி சுப்ரமணியம் தலைமை வகித்தார்.

கோவை மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தின் செயலாளர் ஸ்ரீ வீனா யாழினி தர்ணா போராட்டத்தினை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். முடிவில் திருநங்கை நலவாரிய உறுப்பினர் பிரியா பாபு நன்றி கூறினார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துக்கொண்டனர்.