சிதம்பரம், ஆக. 30- ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் படித்து அரசு தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கும் நிகழ்ச்சி சுவாமி ஏ.எஸ். சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குக நாதன் தலைமை தாங்கினார். சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சமூக அறக்கட்டளையின் ஆலோசகர் சக்கர பாணி, தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் காவல்துறை அதிகாரி ரகுபதி, ஸ்ரீ சண்முக விலாஸ் குழுமத்தின் உரிமையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் பயின்று அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஹேமலதா, அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மலைராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவகாந்தி, சுவாமி சகஜானந்தா சமூக அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.