districts

img

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி உப்பு-ல் வரையப்பட்ட “செஸ் தம்பி”

கோவை, ஜூலை 15- தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண உப்பில் வரைந்து அசத்தியுள்ளனர். சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியின் துவக்க விழாவில் பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், முதல்வர் என பலர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், “செஸ் ஒலிம்பியாட் 2022” போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘செஸ் தம்பி’ என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை  வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல அந்த சின்னம் அமைந்துள்ளது. இந்த சின்னத்தை தமிழக அரசு பிரபலப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் கோவை மணியகாரம்பாளையத்தில் அமைந்துள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள் செஸ் சின்னத்தை 40 அடி உயரம் 20 அடி அகலத்தில் வண்ண வண்ண உப்பைக் கொண்டு வரைந்துள்ளனர். 40 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் இந்த சின்னத்தை வரைந்து அசத்தியுள்ளனர். தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெறுவது பெருமையளிப்பதாகவும், இதுகுறித்து மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சின்னத்தை வரைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.