சேலம், ஜூலை 24- உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கான உரிய இழப்பீடை விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க எடப் பாடி தாலூகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க எடப்பாடி தாலூகா 7 ஆவது மாநாடு இருப்பாளி தாழைத்தோட்டம் முனியப்பன் கோவிலில் தாலூகா தலைவர் கே.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை மூத்த தலைவர் பழனியப்பன் ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி உரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலூகா செயலாளர் மு.பெரியண்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, தாலுகா செயலளார் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பூலாம்பட்டி - ஆடையூர் 110 கேவி உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு சந்தை மதிப்பின்படி 4 மடங்கு உயர்த்தி இழப்பீடு வழங்க வேண்டும். தேவூர் - குருவம்பட்டி 110 கேவி உயர்மின் கோபுரங்களை விளைநிலம் பாதிக்காமல், சரபங்கா நதிக்கரையோரம் அமைக்க வேண்டும். கூட்டுறவு சொசைட்டியில் விண்ணப்பித்த விவசாயிகள் அனைவரையும் உறுப்பினராக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் எடப்பாடி தாலூகா தலைவராக எஸ்.அய்யந்துரை, செயலாளராக என்.ஜெயவேல், பொருளாளராக குமார், துணைத்தலைவராக கே.லோகநாதன், துணைச்செயலாளராக கலியமூர்த்தி உட்பட 11 பேர் கொண்ட புதிய தாலூகாகுழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில் எம்.மாணிக்கம் நன்றி கூறினார்.