districts

பொன்னமராவதி ,சீர்காழி மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

பொன்னமராவதி கலவரம்: 22 பேர் கைது

பொன்னமராவதி, ஜூன் 1-புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த ஏப்.18-ம் தேதி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசி வாட்ஸ்அப் ஆடியோ பரவியது. இது பொன்னமராவதி பகுதியில் பெரிய அளவில் கலவரத்தை ஏற்படுத்தியது. அவதூறு பரப்பியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். மேலும் அந்த கலவரத்தின் போது பொதுச் சொத்துகள் சேதமாகின. இதில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக சிசிடிவி ஆதாரத்தின் பேரில் சுமார் 22 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் விதமாக 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

அரசுப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை  

சீர்காழி, ஜூன் 1-வளமான நிலம், மாசற்ற நீர், காற்று மக்களுக்கு கிடைத்திட முன்னுரிமை அளித்து செயல்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அரசுப் பணியில் காலிப் பணியிடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி நாகை மாவட்ட நுகா்வோர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினரும், கொள்ளிடம் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவருமான ரவிச்சந்திரன், பிரதமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.  

வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு  

கும்பகோணம் ஜூன் 1-கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் உதவி ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் தேவனாஞ்சேரி அத்தியூர் சோழபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன்  தலைமையில் ஒன்றிய செயலாளர் நாகமுத்து முனனிலையில்  சங்க பொறுப்பாளர்களுடன் அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான வீடு குடி மனை பட்டா கோரி கும்பகோணம் ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக வந்து மனுக்களை உதவி ஆட்சியர் பாலச்சந்திரனிடம் அளித்தனர்.அதில், அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும். வீடு இல்லாதவருக்கு விவசாயத் தொழிலாளர்களுக்கும்  வீடு குடி மனை பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் தாசில்தார்கள் நெடுஞ்செழியன், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகை  ஆலோசனைக் கூட்டம் 

கும்பகோணம் ஜூன் 1-கும்பகோணத்தில், ரம்ஜான் பண்டிகை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் அல்-அமீன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  ஈக்தா பணிக் குழு தலைவர் பசீர் அஹமது தலைமை தாங்கினார். அல்-அமீன் பள்ளி தாளாளர் கமாலுதீன் கிஸ்வா தலைவர் அப்துல் சுபுஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஹம்மது ஜியாவுதீன் ஜமாத் தலைவர்கள் அபுதாஹிர், அய்யூப் கான், அப்துல்கபூர், கிஸ்வா நிர்வாகிகள் மற்றும்  ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கும்பகோணத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கம், கிஸ்வா சார்பில் பெரிய பள்ளிவாசல், அரக்காசியம்மாள் பள்ளிவாசல், ஹாஜியார் பள்ளிவாசல் உள்பட பன்னிரெண்டு ஜமாத்துகள் இணைந்து சிறப்பு ரமலான் தொழுகையை அல் அமீன் பள்ளி திடலில் நடத்துவது, அனைத்து சமூக மக்களும் மதநல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழவும் ஏழை- எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் பிரார்த்தனை செய்வது உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டது.