சேலம், பிப்.2- சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பொதுமக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாநகரம், கந்தம்பட்டி பகுதியில் சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், எல்எல்ஆர் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக அலுவலகத்தை நாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணினியில் எந்தப்பதிவும் அதிகாரிகள் செய்யவில்லை. கணினியில் சர்வர் பிரச்சனை இருப்பதாகவும், தனிநபர் எந்த வேலையும் செய்ய முடியவில்லை எனவும், இடைத்தரகர்களிடம் அணுகி வேலையை முடித்துக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறி வருகின்றனர். 35 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டிய படிவங்களை, இடைத்தரகர்களை பார்த்து 500 ரூபாய் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற அவலமும் அரங்கேறி வருகிறது. தனிநபர் ஒரு விண்ணப்பத்தை கொடுத்தால் பதில் தராத அதிகாரிகள் இடைத்தரகர்கள் கட்டுக்கட்டாக தரும் படிவங்களை உடனடியாக சரி பார்த்து தரும் நிலை இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள சர்வர் பிரச்சனையை கலைந்து, இடைத்தரகர்கள் இல்லாமல் அதிகாரிகள் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.