இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் தமிழ் மாநில 23 ஆம் மாநாடு எதிர்வரும் மார்ச் 30,31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. நிறைவாக கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் திங்கள் 6 முதல் 10 வரை நடைபெற உள்ளது. கீழிருந்து மேல் வரை நடைபெறும் அனைத்து மாநாடுகளிலும் மாநாட்டின் நிறைவாக ‘பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்’ எனும் சர்வ தேச கீதம் சேர்ந்திசையாக இசைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சர்வதேச கீதம் உருவான பின்னணியைச் சுருக்கமாகப் பார்ப்போம். இரண்டாவது உலகப் போர் தொடங்கியவுடன் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும்படி தலைமறைவாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற காங்கிரஸ் சோச லிஸ்ட் தலைவர்கள் அதை விரும்பவில்லை.
எனவே 1940 ஆம் ஆண்டில் தங்கள் கட்சியில் இருந்து செயல்பட்டு வந்த கம்யூனிஸ்டுகளைக் கட்சியிலிருந்து வெளியேற்றினர். எனவே கம்யூனிஸ்டுகள் தங்களை பகிரங்கமாகப் பிரகடனம் செய்து கொண்டு இரண்டாம் உலகப் போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து சிறை சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளான நாகை சாமிநாதன், தஞ்சை கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். நாகை சாமிநாதன் அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில் சென்னை இளம் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. ஐயங்கார் அடைக்கப்பட்டிருந்தார். சர்வதேச கம்யூனிஸ்ட் கீதமான ‘எழுமின் கொடுஞ்சிறை புகுந்தீர்’ என்ற ஆங்கிலப் பாடலை நாகை சாமிநாதனுக்குத் தமிழில் எடுத்துச் சொன்னார் ஏ.எஸ்.கே. ஐயங்கார். அது மிகச் சிறிய பாடல் தான். அதைக் கேட்ட சாமிநாதன் அந்தப் பாடலை மார்க்சியப் பார்வையில் நீண்ட பாடலாக்கினார். அந்த பாடல்தான்.. ‘பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்கள்’ என்ற நீண்ட பாடலாகும். அதுதான் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உயிர்த் துடிப்பான பாடலாக இன்றும் விளங்கி வருகிறது.
-பெரணமல்லூர் சேகரன்