கடும் நடவடிக்கை எடுக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
சென்னை, பிப். 13 - பழனி அருகே செங்கல் சூளையில் பழங்குடி இருளர் மக்களை கொடூரமாகத் தாக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நரிக்கல்பட்டியில் ஆர்.சி. சேம்பர்ஸ் என்ற செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் குடும்பத்தைச் சார்ந்த 8 பேர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களை செஞ்சி அருகில் உள்ள சித்தரசூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்ற ஒப்பந்தக்காரர் வேலைக்கு சேர்த்துள்ளார். ஆனால், வேலைக்கு வந்தவர்களுக்கு பேசிய அடிப்படையில் கூலி தராமல் ஏறக்குறைய அடிமைகளாக நடத்தி வந்துள்ளனர். வேலைக்கு வந்தவர்களில் சக்திவேல் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சக்திவேல் - அழகம்மாள் தம்பதியினர் இருவரும் மருத்துவச் சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தற்பொழுது சக்திவேல் கல்லீரல் பாதிப்பின் காரணமாக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சக்திவேலையும், அழகம்மாளையும் உடனடியாக வேலைக்கு அழைத்து வரச் சொல்லி அவர்களது மகள் ரேணுகாவையும் அவரது கணவர் பார்த்திபனையும் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறவரை அழைத்து வரவில்லை, என்பதற்காக 11.02.2024 அன்று மாலை ரேணுகாவையும், பார்த்திபனையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கம்பு மற்றும் கற்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில், கடுமையான காயங்கள் அடைந்துள்ள இருவரும் தற்போது பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதத் தன்மையற்ற இந்தக் கொடூர தாக்குதலைத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான, துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் இதர தீர்வுதவிகளை தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.