மோடி அரசு கைவிட்ட நிலையில் விருந்தினர்களைப் போல உபசரித்த கேரளம், தமிழ்நாடு அரசுகள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்றின் துயரத்தை காட்டிலும் கொடுந்துயரத்தை அனுபவித்தது புலம் பெயர் தொழிலாளர்கள்தான். மனிதத்தன்மையற்ற ஒன்றிய ஆட்சியாளர்களால் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தி விருந்தினர் தொழிலாளர்களை வீதியில் தவிக்க விட்ட கொடூரத்தை நிகழ்த்திய மோடி அரசை மறக்க முடியுமா என்கின்றனர் கோவை, திருப்பூர் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள்.
மறக்க முடியுமா? எங்களை நடக்க வைத்த ஒன்றிய மோடி அரசை…
கோவை, திருப்பூர் போன்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் செயல்படக்கூடிய மாவட்டங்களில், லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த திடீரென அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால், தமிழகத்தில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் பரிதவித்தனர், பல்லாயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்ற காட்சி இன்றும் மனித நேயம் கொண்டவர்களின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம், கைகளில் பணமில்லாமல், உண்ண உணவில்லாமல், தங்குமிடம் இல்லாமல், தங்களுடைய சொந்த கிராமங்களை நோக்கி பல நூறு மைல்களை கால்களால் அளந்தே சென்றனர். இன்னும் பலர் ஊர் செல்ல இயலாமல் தனிச்சிறையில் அடைபட்டு, வதைபட்டனர். தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழிற்சாலைகள், உணவகங்கள் உட்பட பல இடங்களில் பணி செய்து வருகின்றனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருவாரியான புலம் பெயர் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அன்றைய துயரத்தில் இருந்து இன்னும் மீளாத பலரிடம் பேசுகையில்,
கோவிந்த்:
நான் பீகார் மாநிலம் கிசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவன். திருப்பூருக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது. இங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணி புரிகின்றேன். கொரானா பெருந்தொற்று காலத்தில் முதல் ஊரடங்கு அறிவித்தவுடன் என்னால் ஊருக்கு செல்ல முடியவில்லை. எங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆயில் உள்ளிட்டவைகளை தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. அதை வைத்து சமாளித்துக் கொண்டோம். மூன்று மாதத்திற்குப் பிறகு ஊருக்கு செல்ல இலவச ரயில் பயணத்திற்கான டோக்கன் தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. அதை வைத்து ஊருக்கு சென்றோம். இங்கு ஊரடங்கு காலத்தில் எங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் அரசே வழங்கியது. எங்கள் ஊரில் அப்படி அரசு ஏதும் வழங்கவில்லை. எங்கள் நார்த் இன்டியாவில் உள்ள மாநிலங்களில் வேலை செய்தவர்கள் எல்லாம் நடந்தே வாந்தார்கள். அங்கிருந்த மாநில சர்க்காரும் ஒன்றும் செய்யவில்லை, மோடி சர்க்காரும் ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் எங்கள் சொந்த ஊர் சென்றதும், விவசாயப் பணிக்கு சென்று தான் எங்கள் வாழ்க்கையை நடத்தினோம்.
அஜ்மல்:
நான் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன், தற்போது பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருகின்றேன். அருகாமையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணி புரிகின்றேன். முதல் ஊரடங்கு அறிவித்தவுடன் என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு நண்பர் ஒருவர் மூலமாக அரசு சார்பில் டோக்கன் வழங்குவதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அருகாமையில் உள்ள பள்ளிக்கு சென்று டோக்கன் வாங்கி ஊருக்கு சென்றேன். என் நண்பர்கள் சிலருக்கு ரயில் பயண டோக்கன் கிடைக்கவில்லை. பேருந்துகள் மூலம் நபர் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை கொடுத்து ஊருக்கு வந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து ஊருக்கு செல்வது கூட பரவாயில்லை. எங்கள் மாநிலத்திற்கு அருகாமையில் உள்ள மாநிலங்களிலிருந்து நடந்தும், சைக்கிளிலும் பத்து நாட்கள் பயணம் செய்து ஊருக்கு வந்தவர்கள் பலர் உள்ளனர். ஊரடங்கு காலத்தையும் மறக்க முடியாது மோடி சர்க்காரையும் மறக்க முடியாது என்றார்.
பாலாஜி:
பாட்னாவிலிருந்து இங்கு வந்துள்ளேன். லாக்டவுன் போடுவதற்கு 7 நாட்களுக்கு முன்பே உறவினர் ஒருவரின் திருமணம் என்பதால் நான் அங்கு சென்றுவிட்டேன். இங்கிருந்த எனது தோஸ்த்துகள் 70க்கும் மேற்பட்டோர் ஒவ்வொருவரும் 4,800 ரூபாய் கொடுத்து, பேருந்தில் பயணம் செய்து பீகார் வரை வந்தார்கள். பணம் இல்லாதவர்கள் இங்கேயே இருந்து விட்டனர். குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்க முடியவில்லை மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம், என்றார்.
உலகமே பெருந்தொற்றை எதிர்கொண்டது, ஊரடங்கு பிறப்பித்தது, மக்களை பாதுகாக்க களமிறங்கியது. ஆனால், நம் நாட்டில் மட்டும்தான் எந்தவொரு முன் அறிவிப்புமின்றி ஒன்றிய மோடி அரசு பிறப்பித்த ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஓரிரு நாள் அவகாசம் கூட அளிக்காமல், அடுத்த கனமே போக்குவரத்தை முழுமையாக தடை செய்தது ஒன்றிய மோடி அரசு. சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயலும் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, உறைவிடம் இல்லாமல் தவித்தனர். நடந்து சென்றபோதே பலரும் உயிரிழந்தனர். அப்படி உத்தரபிரதேசத்துக்கு சென்றவர்களை சாலையில் வைத்து கிரிமிநாசினியை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்த காட்சியை மறக்க முடியுமா!
உச்சநீதிமன்றம் தலையிடவில்லை என்றால், ஊசி கூட கிடைத்திருக்காது என்பதே உண்மை. நீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவே பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் செல்ல முடிந்தது. அந்த சிறப்பு ரயிலுக்கும் கூடுதல் கட்டணம் விதித்து சுரண்டியதுதான் மோடி சர்க்கார். ஒன்றிய மோடி அரசு புலம்பெயர் தொழிலாளர்களை கைவிட்ட நிலையில், தமிழக அரசும், கேரள அரசும் இத்தொழிலாளர்களை விருந்தினர் தொழிலாளர்கள் என்கிற அடைமொழி கொடுத்து, விருந்தினர்களைப்போல உபசரித்து பாதுகாத்தனர்.
மோடி அரசோ, அறிவியல் சிந்தனையற்று, கையை தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என கொரோனா தொற்றை விரட்ட அறிவீலித்தனமான அறிவிப்பை செய்தவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். அத்தகைய மோடி ஆட்சியை விரட்டிட வடமாநில தொழிலாளர்களும் தயாராகிவிட்டதாகவே அவர்கள் பேச்சில் இருந்து தெரிகிறது.