கார்ப்ரேட்டுகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்கள் சீர்குலைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடுவது, எரிபொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியது, மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் சிறுகுறு தொழில்களை சீரழித்தது உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரேத நடவடிக்கைகளை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது.
திங்களன்று துவங்கிய இந்த போராட்டம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. கோவை கோட்டத்தில் இயங்கும் 1470 அரசு பேருந்துகளில் சுமார் 20க்கும் குறைவான பேருந்துகளே இயங்குகிறது. சுமார் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதேபோன்று கோவை மாவட்டத்தில் சுமார் 80 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களான அக்வாசப், டெக்ஸ்மோ போன்ற தொழிற்சாலைகள் முற்றிலுமாக மூடப்பட்டது. அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படாத நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இருப்பினும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள் நியாமானது என்பதால் பொதுமக்களும் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக அன்றாடம் ஏறிவரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தினர். அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்த பொது வேலை நிறுத்தம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.