உதகை, அக்.18- உதகை அருகே விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு காவலர்கள் நிதி உதவி செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, அய்யங்கோலி அருகே உள்ள படிச்சேரி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (45). சேரம்பாடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அனிஷிதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அனிஷிதா, கேரள மாநிலம், கள்ளியோட்டில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று இரு சக்கர வாகனத்தில் சுள்ளியோட்டில் இருந்து சேரம்பாடிக்கு வந்தபோது லாரி மோதிய விபத்தில் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதன்படி,நீலகிரி மாவட்ட காவல் ஆணையாளர் பிரபாகர், துணை காவல் ஆணையாளர் சவுந்தரராஜன் ஆகியோர் ஒரு நாள் ஊதியத்தை மற்ற போலீஸ்காரர்கள் கணிசமான பங்களிப்பையும் வழங்கினர். முடிவில் வசூலான ரூ.3¾ லட்சத்தை அனிஷிதாவிடம், காவல் ஆணையாளர் பிரபாகர் வழங்கினார். சிறப்பு பிரிவு ஆய்வாளர் சுசிலா, துணை ஆய்வாளர்கள் கலைச்செல்வி, ஷியாம் சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.