1973 நவம்பர் 7 அன்று மதுரை பைபாஸ் ரோட்டில் தற்போது அமைந்துள்ள தீக்கதிர் அலுவலக துவக்க விழாவில் பங்கேற்ற மகத்தான தலைவர் பி.ராமமூர்த்தி மற்றும் ஏ.பாலசுப்பிரமணியம், ஆர்.ராமராஜ், வி.கார்மேகம் உள்ளிட்ட தலைவர்கள்.
1973ல், மதுரையில் தற்போது தீக்கதிர் அலுவலகம் அமைந்துள்ள இடம் வாங்கப்பட்டு கட்டிடப்பணி நடைபெற்ற காட்சி.
1973 நவம்பர் 7 புரட்சி தினத்தன்று திறப்புவிழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த தீக்கதிர் கட்டிடம்.
புதிய அலுவலகத்தை திறந்து வைத்து அச்சு இயந்திரத்தை இயக்கி வைத்தார் தோழர் பி.ராமமூர்த்தி. விழாவில் பல்லாயிரக்கணக்கான தோழர்கள், வாசகர்கள் பங்கேற்ற காட்சி.
அன்புமிக்க தோழர்களே! உழைப்பாளி மக்களே! நண்பர்களே, சகோதர, சகோதரிகளே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் இன்று நாம் அனைவரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடையும் நன்னாள். இந்த மகிழ்ச்சி நாளில் உங்களோடு நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன். 12 நாட்களுக்கு முன்பு எனக்கு சிறுநீரகத்தில் அறுவை சிகிச்சை மூன்று நாட்களுக்கு பின்புதான் வீட்டிற்கு திரும்பினேன். மருத்துவ நிபுணர்கள் நான் இன்னும் சில நாட்கள் சென்னையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் அவர்களுடைய கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்று கண்டிப்பான உத்தரவை போட்டிருக்கிறார்கள். அதனால் நான் மதுரை வர இயலாமல் இருக்கிறேன். ஆயினும் நீண்டநாள் கழித்து நவீன இயந்திரத்தில் தீக்கதிர் வெளியிடும் நாள் வந்ததைப் பற்றி எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடைய இந்த செய்தியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நமது பத்திரிகையின் வரலாற்றை உங்களுக்கு கூறுவது நல்லது என்று நினைக்கிறேன். 1925ஆம்ஆண்டு ம.சிங்காரவேலர் அவர்கள் கான்பூரில் நடந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கி நடத்தியபிறகு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தை தோற்றுவித்தார். வேலைநிறுத்தங்கள் பல நடந்தன. இதன் காரணமாக சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. எனினும் ஸ்தாபன ரீதியாக கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் அன்று உருவாகவில்லை. பெரியார் ஈவேரா அவர்கள் கொஞ்ச காலம் சுயமரியாதை கருத்து பிரச்சாரத்தின் போது கம்யூனிஸ்ட் பிரச்சாரமும் செய்த போதிலும் அன்றைய பிரிட்டிஷ் சர்க்கார் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்த உடனே அந்த பிரச்சாரத்தையும் நிறுத்திக் கொண்டார். 1935ஆம் ஆண்டு முதல் முதலில் சென்னையில் கம்யூனிஸ்ட் தோழர்கள் கலந்து கொண்ட ஒரு சிறு குழு அமைக்கப்பட்டது. அதிலிருந்த உறுப்பினர்கள் கே.முருகேசன், நாகர்கோவில் இளங்கோ, மாணிக்கம் (அச்சுத் தொழிலாளி), வி.கே.நரசிம்மன், ஜி.பார்த்தசாரதி, பி.சீனிவாசராவ், சி.எஸ்.சுப்பிரமணியன். பி. ராமமூர்த்தி ஆகியோர் அடுத்த ஆண்டு ப.ஜீவானந்தம் இந்த குழுவில் சேர்ந்தார். நாங்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராகி அதன் பெயரில் செயல்பட்டோம். காரணம் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. பகிரங்கமாக அதன் பெயரில் செயல்பட முடியாது.
‘ஜனசக்தி’ பிறந்தது
1936ல் கட்சியின் வளர்ச்சிக்கு ஒரு பத்திரிகை தேவை என்பதை உணர்ந்தோம். அதற்காக நிதி திரட்டினோம்.
அந்தக் காலத்தில் எங்கள் பெயரில் ஒரு அச்சகத்தை பதிவு செய்ய முடியாமல் இருந்தது. இதனால் காங்கிரஸ்காரனான என்னுடைய நண்பன் கே.பாலன் என்பவரின் பெயரில் திருவல்லிக்கேணி ஹைரோடு தபால் நிலைய கட்டிடத்திற்கு அடுத்த வீட்டை வாடகைக்கு எடுத்தோம். அதில் ‘ஜோன்ஸ்’ அச்சகம் என்ற கிறிஸ்தவ பெயரில் ஒரு அச்சகத்தை ரிஜிஸ்டர் செய்தோம். அந்த நண்பர் ஜோன்சையே வெளியீட்டாளராக வைத்து ‘ஜனசக்தி’ என்ற வார இதழை வெளியிட பதிவு செய்தோம். இரண்டாவது உலக யுத்தம் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஆரம்பமானது. சில வாரங்கள் வரையில் ஜனசக்தி வெளியாயிற்று. தமிழ்நாட்டில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அனுதாபிகளும் சிறைப்படுத்தப்பட்டனர். சிலர் தலைமறைவாகப் போனார்கள். இந்த நிலையில் வார இதழ் நின்று விட்டது. 1941ஆம் ஆண்டு ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்தான். இதன் விளைவாக மாறுபட்ட அரசியல் சூழ்நிலைமை தோன்றியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த நிலைமையை விளக்க வேண்டி வந்தது. ஹிட்லரும் அவனுடைய பாசிஸ்ட் கூட்டாளிகளும் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றால் உலகத்துக்கே ஆபத்து. இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் கடுமையாக பல்லாண்டுகள் நீடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டார். அதற்கு பிரதான காரணமாக சோவியத் யூனியன் தான் இருக்கும் என்பதை உணர்ந்து சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐக்கிய நாடுகளில் யுத்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக நாம் பறைசாற்றினோம். இதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சிக்கு வேறு வழியில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதிருந்த தடையை நீக்கியது. அதிலிருந்து கட்சி பகிரங்கமாக பணியாற்ற முடிந்தது.
சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டு முன்பு வரை - 1946 வரை இந்த நிலை நீடித்தது. 1946ல் தில்லியில் இடைக்கால சர்க்கார் நிறுவப்பட்ட போது பல மாநிலங்களில் கட்சித் தலைவர்களும், தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். ஆயினும் ஜனசக்தி வார இதழ் வந்து கொண்டேயிருந்தது. 1946 - 47 போராட்டங்களின் போதும் நாடு சுதந்திரம் பெற்ற போதும் ஜனசக்தி, கம்யூனிஸ்ட் கருத்துக்களை பிரச்சாரம் செய்தது. 1948 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் சர்க்காரும், மாநில சர்க்கார்களும் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் பிரசுரங்களையும் தடை செய்தன. ஜனசக்தியுடன் மற்ற பிரசுரங்களையும் வெளியிட முடியவில்லை. 1951ல் இந்திய அரசியல் சட்டம் அமலானபோது சுப்ரீம் கோர்ட், இந்த தடைகள், அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட ஜீவாதார உரிமைகளுக்கு விரோதமானவை என்று தீர்ப்பளித்தது. அதன் விளைவாக கட்சி மீண்டும் பகிரங்கமாகச் செயல்பட முடிந்தது. கட்சிப் பத்திரிகைகளும் வெளி வர ஆரம்பித்தது.
ஜெர்மனி இயந்திரம்
1960 ஆம் ஆண்டு 81 நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு மாஸ்கோவில் நடந்த போது நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளில் ஒருவனாக கலந்து கொண்டேன். அங்கிருந்து கிழக்கு ஜெர்மனிக்கு சென்று மணிக்கு 20 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கக்கூடிய நவீன அச்சு இயந்திரத்தை குறைந்த விலையில் தமிழ்நாடு கட்சியின் நாளிதழுக்காக வாங்கினேன். ஒரு லட்சம் ரூபாய் விலை பேசி முதல் தொகையாக ரூ.20 ஆயிரம் கொடுப்பது என்றும் மீதித் தொகையை நான்கு தவணைகளில் கொடுப்பது என்றும் பேசி நாடு திரும்பினேன். அன்றைய ஜனசக்தியை, ஜனசக்தி கம்பெனி லிமிடெட் என்று ரிஜிஸ்டர் செய்து அதற்கு பங்குகள் சேர்க்க ஆரம்பித்தோம். வெகு விரைவில் ஒரு லட்சம் பெறுமானமுள்ள பங்குகள் சேர்ந்து விட்டன. இதில் அதிகமான பங்குகளை சேர்த்திட நானும் சிபிஎம் முன்னோடி தோழர்களும் உழைத்தோம். கட்சியில் திருத்தல்வாதம் மேலோங்கியதால் பிளவுபட்டது. ஜனசக்தி அச்சகத்தை நிறுவுவதற்காக மதுரையில் தற்போது தீக்கதிர் அச்சகம் இருக்கும் 48 செண்ட் விஸ்தீரணம் உள்ள அந்த இடத்தை வாங்கினோம். கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இந்திய சீன எல்லை யுத்தம் வந்தது. அப்போது என்னையும், இதர தோழர்களையும் சீன ஆதரவாளர்கள் என குற்றம் சாட்டி இந்திய அரசு சிறைப்படுத்தியது.
ஜனசக்தி கம்பெனி ஆரம்பிக்கும் போது ஜனசக்தி வார இதழ் அச்சகத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் மதிப்பு போட்டு அந்த பங்குகளை ஜனசக்தி மேனேஜர் எஸ்.கிருஷ்ணசாமியின் பெயரில் வங்கியில் போட்டு வைத்திருந்தோம். கம்பெனிக்கு 1 லட்சம் ரூபாய் சேர்ந்தவுடன் கட்சியின் ஆதரவாளர் வளவனூர் பெருமாள் ஐயர் என்பவர் கட்டிடத்தை கட்டி முடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். நாங்கள் சிறையில் இருந்தபோது, பத்திரிகைக்காக வாங்கிய இடத்திலே ஒரு கொட்டகை போட்டுக் கொண்டு நோய்வாய்ப்பட்டு இருந்தபோதெல்லாம் அங்கே தங்கியிருந்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு கட்டிடத்தை கட்டி முடித்தார். இதன் பிறகு கிழக்கு ஜெர்மனியிலிருந்து இன்ஜினியர்கள் மிஷினையும் நிறுவி தந்தனர். இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் எஸ்.கிருஷ்ணசாமியை நிர்ப்பந்தித்து அவர் பெயரில் இருந்த பங்குகளை பால தண்டாயுதம், என்.கே.கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன் முதலியவர் பெயரிகளுக்கு மாற்றிக் கொண்டனர். இதனால் கணிசமான பங்குகள் அவர்கள் வசம் மாறின. நாங்கள் வெளிவந்த பிறகு நானும், தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அவர்களும் ஆட்சேபித்தோம். எங்களது ஆட்சேபணையை புறக்கணித்து கம்பெனியை கலைத்து விடுவது என்று தீர்மானித்தார்கள்.
அந்த கலைப்பு வேலைகளை செய்து முடிக்க
ஏ.எஸ்.கே.அய்யங்காரை நியமித்தனர்.
இவ்வாறு நாம் கஷ்டப்பட்ட வாங்கி வந்த நவீன அச்சு இயந்திரத்தை பம்பாயிலிருந்து வெளிவரும் ஃபிரிபிரஸ் (free press) நிர்வாகத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டனர்.
ஆனால் கட்டிடத்தை விற்க முடியாமல் ஏ.எஸ்.கே.அய்யங்கார் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஒரு லட்சம் ரூபாய் விலை பேசி பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். அந்த தேர்தலுக்கு பிறகு அங்கிருந்து ஒரு தினசரி பத்திரிகை கொண்டு வருவது அவரது திட்டம். இதற்காக சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. அதனால் அந்த எண்ணத்தை கைவிட்டார். இடத்தையும் வாங்கவில்லை. 1971ஆம் ஆண்டு நானும் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனும் ஏ.எஸ்.கே. அய்யங்காரை சந்திக்க சென்றோம். அப்போதுதான், “இந்த கட்டிடத்தை விற்க முடியாமல் நான்கு ஆண்டுகளாக தவித்துக் கொண்டிருந்தேன். இந்த கம்பெனிக்கான பெரும்பான்மையான பங்குகளை சேர்த்தது நீங்கள்தான். இதை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அய்யங்கார் கூறினார். அதற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்க முடியாது என்று நான் கூறினேன். ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அவர் சம்மதித்தார். பத்து நாட்களுக்குள் ரூபாய் தேடித்தர அவகாசம் கேட்டேன். அவரும் சம்மதித்தார்.
குறித்த காலத்திற்குள் கடன் வாங்கி அந்த கட்டிடத்தையும் விலைக்கு வாங்கி ரிஜிஸ்டர் செய்து விட்டோம். அதற்கு பிறகு கட்டிட நிதி வசூலித்தோம். எனவே இந்த கட்டிடமும், இடமும் நம் கட்சிக்கு கிடைக்க, மறைந்த ஏ.எஸ்.கே.அய்யங்கார் செய்த உதவியை நாம் மறக்கலாகாது. 1985ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த கட்சி மாநாட்டில் தீக்கதிரை செம்மையாக வெளியிட 20 லட்சம் ரூபாய் நிதி வேண்டுமென்றும் அதனை வசூலிக்க முடியுமென்றும் கட்சியின் செல்வாக்கு வளர்ந்து விட்டது என்றும் நான் கூறியதை மாநாடு ஏற்றுக் கொண்டது. நன்கொடை தருவதாக தோழர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். இந்த நிதியில் கட்சித் தோழர்கள் 17 லட்சம் ரூபாயை பெரும் முயற்சியுடன் வசூலித்துள்ளனர். மிச்சமிருக்கும் 3 லட்சம் ரூபாயையும் சிக்கிரத்தில் வசூலித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது. இந்த ஆப்செட் அச்சு இயந்திரத்தை துவக்குவது கேரள முதலமைச்சர் இ.கே.நாயனார் செய்வது சாலச்சிறந்தது. நான் முதலில் கூறிய காரணத்தால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஆனாலும் என் உள்ளம் மதுரையிலேயே இருக்கிறது. பத்திரிகை விற்பனையை அதிகரிப்பதற்காகவும் பத்திரிகையை நஷ்டமில்லாமல் நடத்துவதற்கு விளம்பரங்களை சேகரிப்பதற்கும் கட்சித் தோழர்கள் அயராது பாடுபடுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் தீக்கதிர் பத்திரிகை விற்பனையாகி கட்சியும் துணை ஸ்தாபனங்களும் வளர்ந்து விரைவில் தமிழ்நாட்டில் நமது கட்சி முதல் பெரும் கட்சியாக வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவைகளை பயன்படுத்தி நமது கட்சித் தோழர்கள் நமது கட்சியின் செல்வாக்கை வளர்ப்பதற்கு துரிதமான பாடுபடுங்கள்.
தீக்கதிர் வளர்க! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க! புரட்சி ஓங்குக!