districts

img

சேலம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.96.84 கோடி கடனுதவி வழங்கல்

சேலம், பிப்.8- சேலம் மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.96 கோடியே 84 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 13,799 குழுக்கள், நகர்புற பகுதியில் 7,083 குழுக்கள் என மொத்தம் 2,55,943 மகளிரைக் கொண்ட 20,882 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, வருடந்தோறும் வங்கிக் கடன் இணைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் நடப்பாண்டிற்கு ரூ.1,124 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.93.55 கோடி வங்கி கடனுதவி, சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.3.29 கோடி என மொத்தம் ரூ.96.84 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் 1518 குழுக்களைச் சார்ந்த சுமார் 18,216 மகளிர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. இவ்விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆர்.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் துணை மேயர் சாரதா தேவி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.