districts

வளர்ச்சி திட்ட பணிகள் - சட்டபேரவை பொதுக்குழு ஆய்வு

தருமபுரி, ஆக.23 - தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மற்றும் பொது கணக்குக் குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி நகராட்சி, சந்தை பேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானப்பணிகளை பொது கணக்குக் குழுவினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும், தருமபுரி நகராட்சி, உழவர் சந்தை அருகில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிர்வாக அலுவலகம் மற்றும் கொள்முதல் உள்ளிட்ட அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை பொது கணக்குக் குழுவினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமானதாக செய்து முடிக்கவேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர்  கு. செல்வபெருந்தகை   அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். முன்னதாக, காரிமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.  இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திருச்செங்கோடு ஈஸ்வரன், பரமத்திவேலூர் சேகர், திருப்போரூர் பாலாஜி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.  தருமபுரி  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி ஆவின் பொது மேலாளர் மாலதி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.கே.கீதாராணி, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.