districts

img

சில்லரை வணிகத்தை பாதுகாக்க முனைப்புடன் போராடுவது மார்க்சிஸ்ட் கட்சியே!

தூத்துக்குடி, மே 5-தமிழகத்திலும், இந்தியாவிலும் சில்லரை வணிகம் உள்ளிட்ட சுய தொழில்களை பாதுகாப்போம்; சில்லரை வணிகத்தை அழிவின் விளிம்புக்கு தள்ளிய உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாட்டை விடுவிப் போம் என்று உறுதியாக அறிவித்து அதற்கான போராட்டங்களை முன் னெடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே என்று தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெற்ற சுதேசி பொருளாதாரப் பிரகடன மாநாடு பெருமிதத்துடன் குறிப்பிட்டது.சில்லரை வணிகத்தை அழிக்கும் ஆன்-லைன் வணிகத்தை அனுமதிக்க முடியாது என்றும் அந்நிய வர்த்தக ஆதிக்கத்தை விரட்டும் முயற்சியில் முழு மூச்சோடு இறங்குவோம் என்றும் தமிழக வணிகர்களுக்கு இம்மாநாடு அறைகூவல் விடுத்தது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 36வது வணிகர் தின விழா மற்றும் சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு தூத்துக்குடியில் மே 5 ஞாயிறன்று நிலா ஸீ புட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பேரவையின் தலைவர் த.வெள்ளையன் தலைமையேற்று உரையாற்றினார்.

அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிகார் மிஸ்ரா, செயலாளர் சுனில் பாண்டே, உலக தமிழர் பேரவைநிறுவனர் பழ.நெடுமாறன், மக்கள் நலப் போராளி உதயகுமார், மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் வழக்கறி ஞர் ஹென்றி டிபேன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை, பேராசிரியர் பாத்திமா பாபு, வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் தேவராஜ், மாநிலத் துணைத்தலைவர்கள் பாவூர் சத்திரம் ராமச்்சந்திரன், பொன்தனகரன், பொருளாளர் ரத்தினம், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், மாவட்டப் பொதுச் செய லாளர் செந்தில் ஆறுமுகம், மாநில இளைஞரணிச் செயலாளர் தெர்மல் ராஜா, தெற்கு மாவட்டத் தலைவர் உடன்குடி ரவி, பொருளாளர் ராஜலிங்கம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தின ரோடு பங்கேற்றனர்.இம்மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி த.வெள்ளையன் நிறைவுரை யாற்றினார். முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கு அடிப்படையாகத் திகழும் சில்லரை வணிகம், விவசாயம், சிறு-குறுந்தொழில்கள் மற்றும் பொதுத்துறை கள் போன்ற மக்களின் சுயவேலை வாய்ப்புத்துறைகளில் அந்நிய ஆதிக்கம் ஏற்பட மத்திய அரசேவழிவிட்டிருக்கிறது. இதனால் சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்து சுயதொழில்களும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுவிட்டது.இந்த நிலையில் தேர்தலில் வாக்களித்து, இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமையைக் காப்பாற்றி விட்டு நாம் காத்திருக்கிறோம். தேர்தலில் வெற்றிபெறுவோர் மக்களின் சுயதொழில்களைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்.அந்நிய ஆதிக்கத்தை முறியடித்து சில்லரை வணிகம் உள்ளிட்ட சுயதொழில்களைக் காப்போம். இதற்கெல்லாம் காரணமான உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாட்டை விடுவிப்போம். இனி இதுதான் எங்கள் கட்சியின் லட்சியம் - என்று அறிவிப்போரை தேர்தலில் ஆதரிப்போம் என்றோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர எந்த கட்சியும் அதற்கு முன்வரவில்லை.ஜிஎஸ்டி, வரிவிதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, 100 சதவிகித அந்நிய முதலீடு போன்ற தாக்குதல்களால் அழிவின் விளிம்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம் நாட்டு சில்லரை வணிகத்தை முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே அந்நிய ஆன்லைன் வணிகத்தைக் கண்மூடித்தனமாக அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த வணிகர் விரோதப் போக்கை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

எந்த நிலையிலும் எந்த வடிவத்திலும் வணிகர் விரோத ஆன்லைன் வணிகத்தை அனுமதிக்கவே முடியாது என்றும், அந்நிய வர்த்தக ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு திணிக்கப்படும் ஆன்லைன் வணிகத்தை அடித்து விரட்டும் முயற்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழுமூச்சோடு இறங்கும் என்றும் தமிழக வணிகர்கள் சார்பாக பிரகடனம் செய்கிறோம்.ஆன்லைன் வணிகத்தை அடித்து விரட்டும் முயற்சியில் மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களும் பல்வேறு சுயதொழி ல்களில் ஈடுபடும் எங்கள் சொந்தச் சகோதரர்களும், பொதுத்துறை ஊழியர்களும் வணிகர் சக்திக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.ஆன்லைன் மூலமோ, பேரங்காடிகளிலோ நுகர்பொருட்களை வாங்கும் கவர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும். வசிக்கும் இடத்தின் அருகாமையிலேயே இருக்கும் சில்லரை விற்பனைக் கடைகளில், ஆன்லைன்/ பேரங்காடிகளைக் காட்டிலும் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதை அறியாமல் விளம்பர மோகத்தால் திசைமாறிப் போவது, பாரம்பரிய சில்லரை வணிகத்தை நசுக்கிவிடும் என்கிற உண்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும். உங்கள் ஒவ்வொருவரது உறவு வட்டத்திலும் ஓர் எளிய சில்லரை வணிகர் இருப்பது நிச்சயம். சுய உழைப்பில் தொழில் நடத்தும் அவர்களை சுயமரியாதையோடு வாழச் செய்ய வேண்டிய கடமை நமக்கிருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நம்நாட்டு சில்லரை வணிகத்தை அழித்த பிறகு பேரங்காடிகளையும், சங்கிலித்தொடர் கடைகளையும் அழிப்பது சுலபம். முழுமையான அந்நிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், நாடாளும் தலைவர்களால் எதுவும் செய்ய இயலாது. உலக வர்த்தக ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்துகிறதாம். வஞ்சிக்கப்படும் - பாதிக்கப்படும் இந்த ஆபத்துகளிலிருந்து நம்மைக் காக்க நாம் பயன்படுத்த வேண்டிய ஆயுதம், சுதேசி ஆயுதம். அந்நியப் பொருட்கள் எதையும் வாங்கக்கூடாது. நம்நாட்டு சொந்தத் தயாரிப்புகளையே வாங்க வேண்டும். ஆன்லைன் மூலம் எதையும் வாங்கக்கூடாது. அந்நிய வங்கிகள், டெலிபோன் போன்றவற்றையும் புறக்கணிப்போம். பிறகு அந்நிய சுரண்டல் நீங்கி உள்நாட்டு சுதேசிப் பொருளாதாரம் வலுப்பெறும்.வணிகர் விரோத நடவடிக்கைகளான ஆன்லைன் வணிகம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டம், சேவை வரி அதிகரிப்பு போன்றவற்றை வலுக்கட்டாயமாகத் திணித்து, வணிகத்தை அழிக்க முயலும் மத்திய அரசு, நம் நாட்டு வணிகத்தை அந்நியருக்கு முழுமையாக அர்ப்பணித்துவிட சில்லரை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த சில்லரை வணிகத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து லட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைக்கும் மத்திய அரசின் வஞ்சகப்போக்கை இந்த மாநாடு கண்டிக்கிறது.இதற்கெல்லாம் காரணம் உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற பேரில் பணக்கார நாடுகள் விரித்த வஞ்சக வலையே! இந்த வஞ்சக வலையை அறுத்தெறியாவிட்டால், நாடு மீண்டும் அந்நியரிடம் அடிமைப்பட நேரிடும். இந்த பேராபத்திலிருந்து நாட்டைக் காக்க வணிகர்களும், வாடிக்கையாளர்களான பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு வெளியேற்ற சுதேசி ஆயுதத்தை மக்களுக்கு வழங்கிய வஉசிதம்பரனார் அண்ணல்காந்தி வழியில் நாம் செயல்பட வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளில் அந்நிய தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என உறுதியேற்போம்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;