திருவனந்தபுரம், மார்ச் 30- எளமரம் கரீம் எம்.பி மீது தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்த ஏசியாநெட் நியூஸ் சேனலின் நடவடிக்கையை கண்டித்து ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை இழிவுபடுத்தியும், சிஐடியு தலைவரும் சிபிஎம் மாநிலங்களவை குழுவின் தலைவருமான எளமரம் கரீம் மீது தாக்குதல் நடத்துமாறு ஏசியாநெட் நெறியாளர் வினு வி.ஜான் அழைப்பு விடுத்தார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்கிடையே மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஏசியாநெட் செய்தி அலுவலகங்களை நோக்கி பேரணி நடத்தினர். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு அலுவலகங்களை நோக்கி இந்த பேரணிகள் நடைபெற்றன. போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநில தலைவர் ஆனத்தலவட்டம் ஆனந்தன் பேசுகையில், போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது வரும் என்றார்.
வினு வி.ஜானின் வன்முறைக்கான அழைப்பு மீது ஏசியாநெட் நியூஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறே செயற்பட அந்த நிறுவனம் முடிவு செய்தால் தொழிலாளர்களின் போராட்டம் மேலும் வலுவடையும் என தெரிவித்தார். ஐஎன்டியுசி தலைவர் ஆர்.சந்திரசேகரன் கூறுகையில், பத்திரிகையாளரின் தரம் சீரழிந்து வருகிறது. இது தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு சவாலாக உள்ளது. எளமரம் கரீம் போன்ற உயர்மட்ட தொழிலாளர் தலைவரை தனிமைப்படுத்தி தாக்குவதற்கான நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார். வினு ஜான் கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்தார். ஏசியாநெட் சேனல் ஜனநாயக விரோத மொழியில் அவமதிப்பு செய்துள்ளது. ஏசியாநெட்டின் இந்த நடவடிக்கையை தொழிற்சங்க கூட்டு மாநிலக்குழு கடுமையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.
சிபிஎம் கண்டனம்
ஏசியாநெட்டின் வினு வி. ஜான், சிபிஎம் மத்திய குழு உறுப்பினரும், ராஜ்யசபா கட்சித் தலைவருமான எளமரம் கரீம் மீது தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதனன்று (மார்ச் 30) செய்தியாளர்களிடம் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில், எளமரம் கரீமின் முகத்தில் அடித்து ரத்தம் சிந்த வைக்க வேண்டும் என ஏசியாநெட் நெறியாளர் வினு வி ஜான் கூறியது அவரது விருப்பம். அதைச் செய்ய வேண்டுமானால் நாளை ஏசியாநெட் முன் எளமரம் கரீமை நிறுத்தலாம். அவர்கள் சொன்னதை செய்வார்களா என்று பார்ப்போம் என்று சவால் விடுத்தார். ஊடகங்கள் இப்படிச் செயல்படக்கூடாது. ஏசியாநெட்டில் சிலர் மட்டுமே இதுபோல் உள்ளனர். எல்லோரும் இல்லை. இதுபோன்ற விசயங்களில் பத்திரிகையாளர்கள் துணைபோகக் கூடாது என்றும் கொடியேரி கூறினார்.