பவானியாற்றில் நீர் அருந்தி விட்டு குடியிருப்பின் குறுகிய சந்து வழியே பாகுபலி யானை கடந்து சென்றதால், அச்சத்துடன் பொதுமக்கள் வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையொன்று சுற்றி வருகிறது.இந்த யானை இரவானால் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வர துவங்குவதோடு வழியில் கிடைக்கும் விவசாய பயிர்களை உண்டு விட்டு தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு செல்வது வாடிக்கையாகி விட்டது.ஆனால் இந்த யானை எந்த நேரத்தில் எந்த இடத்தை கடக்கும் என கணிக்க இயலாத வகையில் தினசரி இதன் நடமாட்டத்தை மாற்றி கொள்ளும் என்பதால் பாகுபலி யானையை கண்காணிக்க இயலாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு காட்டை விட்டு வெளியேறிய பாகுபலி பவானி ஆற்றுக்கு சென்று விட்டு இன்று காலை அருகில் உள்ள சமயபுரம் என்னுமிடத்தில் புகுந்து அங்குள்ள குடியிருப்புகள் நிறைந்த குறுகிய சந்திற்குள் நுழைந்து கடந்து செல்ல துவங்கியது.முன்னரே யானை வீதிக்குள் நுழைய முற்படுவதை தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் புகுந்து கதவை தாழிட்டு பாதுகாப்பாக பதுங்கி கொண்டனர்.வீதி வழியே நடந்து சென்ற பாகுபலி பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையை கடந்து நெல்லிமலை வனப்பகுதியை நோக்கி சென்றது.