districts

img

இரவு 12 மணிக்கு  சற்று முன்னதாகத்தான் ஒரு குரல் சொன்னது

இரவு 12 மணிக்கு  சற்று முன்னதாகத்தான் ஒரு குரல் சொன்னது ‘ உன் கையிலிருக்கும் பணம் இன்றிரவு 12 மணிலிருந்து  வெறும் காகிதமாகிவிடும்’  தேசம் ஸ்தம்பித்து நின்றது சிறிது நேரம்தான் பிறகு சாலைகளில் பீதியுடன் மக்கள் ஓடத்தொடங்கினார்கள்  இன்னொரு இரவு  12 மணிக்கு சற்று முன்னதாகத்தான் அதே குரல் சொன்னது ‘ இன்றிரவு 12 மணி முதல் நாடு முழுக்க ஊரடங்கு  யாரும் வெளியே வரமுடியாது’  தேசம் ஸ்தம்பித்தது கொஞ்ச நேரம்தான் பிறகு இலட்சம் பேர் ஆயிரம் மைகள் பயணத்தை கால் நடையாகத் தொடங்கினார்கள்  எல்லோருக்கும் எல்லாம் மறந்துவிட்டது ஆனால் எனக்கு அந்தக் குரல் மட்டும் மறக்கவேயில்லை  ஒற்றை உத்தரவால் யாவற்றையும் உறையச் செய்த குரல் ஒற்றைச் சொல்லால் யாவற்றையும் தலைகீழாக்கும் குரல்  உலகிலேயே மிக அகந்தையான குரல் அந்த இரவில் தன் வலிமையை சோதித்துக்கொண்டது  தன்னால் 130 கோடி மக்களை ஒரு மந்திரகோலால் பைத்தியமாக்க முடியும் என காட்டிய குரல்  உலகிலேயே பெரிய அகந்தை தன்னை நிரூபித்துக்கொள்ள வேறு என்னதான் செய்ய முடியுன்? அது இயற்கையான ஒன்றுதான்  அப்போது பெரும் இருள் சூழ்ந்தது யாருக்கும் கண் தெரியவில்லை ஆனால் என் கண்களால் கண்டேன் இருளில் களிப்பில் மினுங்கிய அந்த அகந்தையின் பற்களை  அது களிப்புடன் சிரித்துக்கொண்டிருந்தது இன்னொருமுறை காணவேண்டுமா அந்தப் பற்களை?  -  மனுஷ்ய புத்திரன்