மே 12, 1930, உப்பு காய்ச்சுவதற்கு கோழிக்கோடு கடற்கரைக்கு வந்த காங்கிரஸ்காரர்களுடன் ஒரு சிறுவன் மூவர்ணக் கொடியையேந்தி வந்தான். காவலர்கள் கடுமையாகத் தாக்கியபோதிலும் தேசியக் கொடியைக் கீழே விடாமல் தனது மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அந்தச் சிறுவன். கடைசியில் அந்தச் சிறுவனை தேசியக் கொடியுடன் காவலர்கள் வண்டியில் தூக்கிப் போட்டார்கள். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல. குருவாயூர் கோவிலுக்குச் சென்று மணியடித்து ’உயிருள்ள நாயர் மணி அடிக்கும். இலை நக்கி நாயர் வெளியில் அடிக்கும்’ என்று கூறிய சாட்சாத் பி.கிருஷ்ணபிள்ளைதான் அவர்.
கோழிக்கோட்டில் நடந்த கூட்டத்தில் ஒரு தொழிலாளியைச் சுட்டிக் காட்டி ’நீ அதிகாரத்திற்கு வரவேண்டும்’ என்று கிருஷ்ணபிள்ளை கூறினார். கிருஷ்ணபிள்ளையும் தோழர்களும் இத்தகைய கண்ணோட்டத்துடன்தான் அணி திரட்டினார்கள். ’மதத்துக்காக அல்ல உணவுக்காகப் போராட வேண்டும்’ என்றும் கற்றுத் தந்தார்கள்.
1938ல் ஆலப்புழாவில் தொழிலாளிவர்க்கம் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுவேலைநிறுத்தம் மற்றும் புன்னப்புரா வயலார் போராட்டங்களின் பின்னால் கிருஷ்ணபிள்ளையின் தியாகம் நிறைந்த செயல்பாடுகள் கேரள வரலாற்றில் மறக்க முடியாத ஏடுகளாகும்.
’
சற்று நீண்ட வலிமையான நாடி எலும்புகளுடன் கூடிய முகம். எப்போதும் சிறு புன்சிரிப்புடன் கூடிய அழகான பற்களுடன் கொஞ்சம் பெரிய வாய். பின்புறமாக சீவிய தலைமுடி. அகன்ற நெற்றி. சாந்தமாகப் பழக்கமும் கணீரென்ற தெளிவான குரல்வளமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பேச்சுத் திறனிலும் தோற்றத்திலும் ஒரு இரும்பு மனிதனைப் போன்றவர்’. கலை இலக்கியவாதி எஸ்.கே.பொற்றேகாட்டின் வார்த்தைகளில் தோழர் கிருஷ்ணபிள்ளை.
1906ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் மணப்பள்ளி நாராயணன் நாயர் அம்மபரூர் பார்வதி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். 13வது வயதில் தாயாரையும் 14வது வயதில் தந்தையையும் இழந்தார். குடும்பத்தைக் காப்பதற்காக ஆலப்புழாவிற்கு வந்து கயிறுத் தொழிலாளியாக வேலை செய்தார். அதன் பிறகு சைக்கிள் கடை, டீ கடைகளில் வேலை செய்தார். நான்காம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடர முடியவில்லை. 1927ஆம் ஆண்டு கேரளத்திலிருந்து பனாரஸிற்குச் சென்ற அவர் அங்கு இரண்டு வருடம் ஹிந்தி படித்தார்.
கேரளத்தில் 1934ஆம் ஆண்டு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியைத் துவங்குவதற்கு முயற்சி எடுத்த அவர் அதன் முதல் பொதுச் செயலாளரானார். பிறகு 1937 ஆம் ஆண்டு உருவான கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் குழுவின் செயலாளர். அந்தக் குழுவை 1939 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளப் பிரிவாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றினார். பின்பு அதன் செயலாளரானார். இரண்டாம் உலகப் போருக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார்.
மொராலா சம்பவம் முடிந்தபிறகு திருவிதாங்கூர் வந்த சேர்ந்த அவர் வைக்கத்தில் கைது செய்யப்பட்டார். 1942ல் விடுதலையான பிறகு தங்கம்மா என்பவரை மணந்தார். 1943 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் நடைபெற்ற முதல் மாநாடு கிருஷ்ணபிள்ளையை செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது 1948 ஆகஸ்ட் 19 அன்று ஆலப்புழை முகம்மது கண்ணார்காடு செல்லிக்கண்டத்து வீட்டில்வைத்து பாம்பு கடித்து இறந்தார். கேரள கட்சிக்கு இன்றுவரையிலும் அவரைவிடச் சிறந்த ஒரு தலைவர் இல்லை. கிருஷ்ணபிள்ளை குறித்து இ.எம்.எஸ்.கூறியது: ’ஒரு இடதுசாரி தேசியவாதியாக இருந்த என்னை ஒரு கம்யூனிஸ்ட்டாகவும் ஒரு பூர்ஷ்வா அறிவு ஜீவியாக இருந்த என்னை ஒரு தொழிலாளி வர்க்க புத்தி ஜீவியாக மாற்றுவதற்கு கிருஷ்ணபிள்ளை உதவினார். தோழர் இல்லாமல் போயிருந்தால் எனக்கு இந்த மாற்றம் வந்திருக்குமல்லவா என்று கேட்டால் பதில் கூறுவது எளிதல்ல. ஒருவேளை ஆம் என்பது பதிலாக இருந்திருக்கலாம். நமது மகத்தான மக்கள் வேறொரு கிருஷ்ணபிள்ளையை சிருஷ்டித்திருக்கக்கூடும்.
-லெனி ஜோசப்