உதகை, ஜன.14 நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 86 கோடி பத்திரப்பதிவு வருவாயாக கிடைத்து உள்ளது. பத்திர பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து, அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக் கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இந்த துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர். அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவண பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ரூ.86 கோடி பத்திரப்பதிவு வருவாயாக கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட பதிவாளர் சீனிவாசன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னூர், கூடலூர், கோத்தகிரி என மொத்தம் 5 அலுவலகங்கள் உள்ளன.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 3336 விற்பனை பத்திரங்கள் உள்பட 8643 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.56.26 கோடி வருவாயாக பெறப்பட்டது. இதேபோல் 2021-ம் ஆண்டு 4195 விற்பனை பத்திரங்கள் உள்பட 10241 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.98.29 கோடி வருவாய் கிடைத்தது. மேலும் கடந்த ஆண்டு ரூ.81 கோடி இலக்கையும் தாண்டி 120 சதவீதம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையை கடந்த ஆண்டு 3965 விற்பனை பத்திரங்கள் உள்பட 9528 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் 86.08 கோடி வருவாயாக பெறப்பட்டது. கடந்தாண்டு இலக்காக 350 கோடி நிர்ணயிக்கப்பட்டதால் இலக்கில் 57 சதவீதம் மட்டுமே எட்ட முடிந்தது. இதேபோல் ஆள்மாறாட்டம் மற்றும் போலியாக பத்திரம் பதிவு செய்தல், மேலும் 2000 வருடத்திற்கு பின்னர் பதிவு செய்த பத்திரங்களை மட்டுமே மாவட்ட பதிவாளர் ரத்து செய்ய முடியும். அதற்கு முன்னர் பதிவு செய்த பத்திரங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.