districts

img

பூஞ்சோலை விவசாயிகள் சங்க போராட்டம் வெற்றி!

கிருஷ்ணகிரி, பிப். 9- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி ஊராட்சிக்குட்பட்ட பூஞ்சோலை கிராமத்தில் நீண்ட நாட்களாக போதிய குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டியிருந்தது. இதுகுறித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மின் அழுத்த குறைபாடு அதிகரித்து வருவதால் மோட்டார் சரியாக இயங்காமல் உள்ளதாகவும், அதனால் போதிய குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை எனவும் ஊராட்சி நிர்வாகம் கூறிவந்தது. இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்திலும், மின் வாரியத்திலும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும், மின்மாற்றியை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக மின்மாற்றியை மாற்ற வேண்டும், போதிய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அஞ்செட்டி வட்டக்குழு சார்பில் மாதப்பன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர் அனுமப்பா, சிஐடியு மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன், சிபிஎம் வட்டச் செயலாளர் தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஓரிரு நாட்களில் பணிகள் முடிவடைந்த உடன் போதிய குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.