districts

img

70 ஆயிரம் டன் சிவப்பு வெங்காயம் அழுகி சேதம்: விவசாயிகள் கவலை

கிருஷ்ணகிரி, மே 16- வெளிநாட்டிலிருந்து ஏற்றுமதி ஆடர் வராததால் சூளகிரி பகுதியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 70 டன் சிவப்பு வெங்காயம் அழுகி வீணானது. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள் என்றும் கூறப்படுகிறது. இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, அத்திமுகம், பேரிகை, பிஎஸ்  தின்னசந்திரம் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட சிவப்பு வெங்காயம் பயிரிடப்பட்டு மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு வரை 120 டன் வெங்காயம் வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கொரோனாவிற்கு பின்பு ஏற்றுமதி செய்வது கடுமையாக சரியத் தொடங்கியது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சிவப்பு வெங்காய ஏற்றுமதிக்கு வெளிநாடுகளில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தற்போது 70 டன் சிவப்பு வெங்காயம் ஏற்றுமதி செய்ய முடியாமல் வயலிலேயே பட்டி போட்டு கட்டி வைத்துள்ளனர். சில நாட்களாக சூறைக்காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெங்காயம் முழுவதும் நனைந்து அழுகி வீணாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அழுகிய வெங்காயத்தை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.