districts

img

குழந்தைகளுக்கு வழங்கிய மதிய சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள்  

குளித்தலை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மதிய சத்துணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.  

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் இப்பள்ளியில் மதிய உணவில் வழங்கும் முட்டைகள் கெட்டுபோய், புழு வைத்துள்ளதாக பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறியதை தொடர்ந்து பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் செல்வராணி மற்றும் உறுப்பினர்கள் பள்ளியில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  

முட்டைகளில் புழு வைத்தும், கெட்டுப்போன வாடை வருவதையும் கண்டறிந்ததுடன், குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகளையே மதிய உணவிற்கு அளித்ததையும் அறிந்து, நடவடிக்கை எடுக்க தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்று குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகளை வழங்கி வருவதால் பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளது என்றும், உடனடியாக இதுபோன்ற முட்டைகள் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மேலாண்மை குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

;