districts

ஏக்கருக்கு ஒரு ரூபாய் நிவாரணம்! காப்பீட்டு நிறுவனம் குளறுபடி

கடலூர், அக்.20- பயிர் காப்பீட்டு திட்டத்திலுள்ள குளறுபடிகளை சரி செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2020 - 21 ஆம் ஆண்டில் ராபி  பருவத்திற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 70 ஆயிரம் விவசாயிகள் 7.83 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்திருந்தனர். இதில் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 540 வீதம் காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காப்பீடு தொகை சாகுபடி செலவில் ஒரு பகுதியை ஈடுகட்டும் வகையில் இருந்தது. இந்த ஆண்டு ‘அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் மூலம் சில நாட்களாக நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 683 கிராமத்தில் 404 கிராமங்கள் மட்டும் காப்பீடு தொகை வழங்க தேர்வு செய்து வழங்கப்படுகிறது. 280 கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நிவாரணம் ஏக்கருக்கு ரூபாய் ரூ. 1 முதல் அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.  

அதில், கடந்த ஆண்டு கடும் மழையால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்ட பயிர்களுக்கு குறைந்த அளவே இன்சூரன்ஸ் கிடைத்துள்ளது. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. வேளாண் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் அமலாக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்திலுள்ள குளறுபடிகள் சம்பந்தமாக விவசாயிகள் விளக்கம் பெறுவதற்கு மாவட்டத்தில் அதிகாரி ஒருவர் மட்டுமே உள்ளார். அவர் வேறு சில மாவட்டங்களையும் சேர்த்து பார்க்கும் நிலை உள்ளது.  கடலூர் மாவட்டத்தில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளதால் மாவட்ட அலுவலகம் கடலூரில் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை கிடப்பில் உள்ளது. இதை அமைத்து கொடுப்பதுடன் அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.