சிதம்பரம், மே 5- புவனகிரி வெள்ளாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் கீழ் புவனகிரி சுடுகாட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் வெள்ளாற்றின் கரையோரம் இரவு 12 மணிக்கு மேல் சில அடையாளம் தெரியாத நபர்களால் டிப்பர் லாரியில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இங்கிருந்து திருடிச் செல்லும் மணல் ஒரு யூனிட் ரூ. 9 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டிப்பரில் 5 யூனிட் வரைக்கும் எடுத்துச் செல்கிறார்கள். இதன் விலை 49,500 ரூபாயாகும். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், அவர்கள் மீது அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்துகிறது. எனவே, மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.