கடலூர்,பிப்.2- கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் தினசரி 100க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு மீன் பிடித்து வரும்போது பலவகை மீன்கள் வலைகளில் சிக்கும். வஞ்சிரம், வவ்வால், பன்னி சாத்தான், சங்கரா மீன், திருக்கை மீன் உள்ளிட்ட மீன்கள் மிகவும் பிரபலமானவை. திருக்கை மீன்களில் புள்ளி திருக்கை, செந்திருக்கை, கொம்பன் திருக்கை உள்ளிட்ட மூன்று வகைகள் உள்ளன. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற வினோத் என்பவரின் விசைப்படகு கரை திரும்பியது. அப்போது வலையில் இருந்த மீன்களை பார்த்தபோது, அதில் சுமார் 28 கிலோ எடையுள்ள மிகவும் அபூர்வகையான வெள்ளை திருக்கை மீன் ஒன்று இருந்தது. இதுகுறித்து அந்த பகுதி மீன வர்கள் கூறுகையில், இதுவரை 3 வகை திருக்கை மீன்களை மட்டுமே அவர்கள் பார்த்திருப்பதாகவும், வெள்ளை திருக்கை மீனை முதல் முறையாக பார்ப்பதாகவும் கூறினர். இது ஒரு அபூர்வ வகை மீன் என்றும் கூறினர்.